பிரம்மோற்சவ 3-ஆம் நாள்: வீரராகவ பெருமாள் கோயிலில் கருட சேவை
திருவள்ளூர், வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற கருட சேவையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில், 3-ஆவது நாளான திங்கள்கிழமை அதிகாலையில் கருட சேவை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 7 மணிக்கு கருட வாகனத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பின்னர், இரவில் ஹனுமந்த வாகனத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் செய்திருந்தனர்.