தை அமாவாசை ராமேசுவரத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடல்

தை அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். 
கடலில் புனித நீராடிய பக்தர்கள்.
கடலில் புனித நீராடிய பக்தர்கள்.

தை அமாவாசையையொட்டி ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். 
தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலையில் நடைதிறக்கப்பட்டு ஸ்படிக லிங்க பூஜைகள் நடைபெற்றன. 
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிகாலையில் இருந்தே அக்னி தீர்த்தக் கரையில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். இதன் பின்னர் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை வழிபட்டனர். 
இதனையடுத்து ராமர், சீதை தங்க கருட வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் அக்னி தீர்த்தக் கரையில் எழுந்தருளியதைத் தொடர்ந்து அங்கு தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற்றது.
தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் திரண்டதால் அக்னி தீர்த்தக் கரை, கோயிலை சுற்றியுள்ளப் பகுதிகளில் 130-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை கொண்டு தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்புப் பணியில் 500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.
திருப்புல்லாணி சேதுக்கரை கடற்கரையில்... இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகேயுள்ள சேதுக்கரை கடற்கரையிலும் ஆயிரக்கணக்கானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com