திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட வந்த 20 எம்.பி.க்கள் வியாழக்கிழமை திருத்தணி மலைக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.
எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்
பணிகளின் தற்போதைய நிலவரம் மற்றும் பயனடைந்தோர் பற்றிய விவரங்களை ஆய்வு செய்வதற்காக 20 எம்.பி.க்கள் அடங்கிய மத்தியக் குழுவினர் வியாழக்கிழமை திருவள்ளூர் வந்தனர்.
அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர்கள், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் செயல்பட்டுவரும் அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு மையம், நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் கட்டில், மெத்தைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான ரத்தப் பரிசோதனை மையம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர். பின்னர், 20 எம்.பி.க்களும் திருத்தணி முருகனை தரிசனம் செய்ய மலைக்கோயிலுக்கு வந்தனர்.
அப்போது, கோயில் இணை ஆணையர் செ.சிவாஜி அனைவரையும் வரவேற்றார். அதைத்தொடர்ந்து, விநாயகர், சண்முகர், வள்ளி, தெய்வானை, முருகப்பெருமானை எம்.பி.க்கள் வழிபட்டனர். அவர்களுக்கு, கோயில் தக்கார் வே. ஜெயசங்கர், முருகன் திருஉருவப்படமும், பிரசாதமும் வழங்கினார்.
இந்த மத்தியக் குழுவில், லம்பா, சாய்பாபா, ஷிவ் பாலக் வர்மா உள்ளிட்ட எம்.பி.க்கள் இடம் பெற்றிருந்தனர். நிகழ்வில், அரக்கோணம் எம்.பி. கோ.அரி, திருத்தணி முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் டி.சௌந்தர்ராஜன், முன்னாள் கவுன்சிலர் ஜெயசேகர்பாபு, கேபிள் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.