திருவள்ளூர், வைத்திய வீரராகவர் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளில் வேணுகோபாலன் திருக்கோலத்தில் வீரராகவர் வெள்ளிச்சப்பரத்தில் மாடவீதிகளில் பவனி வந்தார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இதன் 6-ஆம் நாள் வியாழக்கிழமை அதிகாலையில் நாச்சியார் திருக்கோலத்தில் வீரராகவருக்கு சூர்ணாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வேணுகோபாலன் திருக்கோலத்தில் வீரராகவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் வெள்ளிச் சப்பரத்தில் மாடவீதிகளில் உற்சவர் புறப்பாடும் அதையடுத்து, இரவில் யானை வாகனத்தில் வீரராகவர் பவனியும் நடைபெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.