ஹரியானா மாநிலம், குருக்ஷேத்திரம் என்ற இடத்தில் வட இந்தியாவின் மிகப்பெரிய கோயிலாக வெங்கடேஸ்வரா கோயில் சமீபத்தில் திறக்கப்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் குருக்ஷேத்திரத்தில் பிரம்மாண்ட முறையில் வெங்கடேஸ்வரா கோயில் கட்டப்பட்டுள்ளது.
மகாபாரதத்தில் மிகப்பெரிய போர் நடைபெற்ற இடமாகக் குருக்ஷேத்திரம் கருதப்படுகிறது. அப்பேர்பட்ட இந்த இடத்தில் விஷ்ணுவுக்காகத் தனி ஆலயம் அமைக்க வேண்டும் என்று அம்மாநில அரசு முடிவு செய்தது. அதன்படி, மிகப் பிரம்மாண்ட முறையில் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.
குறிப்பாக விஷ்ணு பக்தர்களுக்காகவும், வட இந்தியர்களுக்காகவும் கட்டப்பட்ட இந்த கோயில் கடந்த ஜூலை 1-ம் தேதி திறக்கப்பட்டது.
இதற்காக கடந்த 2012-ம் ஆண்டு குருக்ஷேத்திர மேம்பாட்டு அமைப்புக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 5 ஆண்டுகளுக்குப் பின், 5.52 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த இந்தக் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இது பிரம்ம சரோவர் அருகே உள்ளது. சுமார் 35 கோடி ரூபாய் செலவில் இத்தலம் கட்டப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலிருந்து இந்தக் கோயில் கட்டுமானத்திற்கான 1,500 டன் கிராபைட் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் திறப்பு நிகழ்வில் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் கலந்துகொண்டார். 70-க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் ஆந்திராவிலிருந்து வந்து கும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளனர்.
இந்தக் கோயில் காலை 6 மணி முதல் 9 மணி வரை பக்தர்களின் சேவைக்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.