பெரியவாளிடம் வந்த பக்தை ஒருவர் தன் கவலையைத் தெரிவித்தார். அதைக் கேட்கவே மிகவும் வினோதமாக இருந்தது.
காக்கை உபத்திரவம் தாங்க முடியவில்லை, தினமும் வீட்டில் கத்துவதில்லாமல், தெருவில் போகும் போது, தலையில் வந்து கொட்டுகிறது. தினமும் இப்படி நடக்கிறது, வேதனையாய் இருக்கிறது என்றார்.
பெரியவா மௌனமாக கேட்டுக் கொண்டிருந்தார்.
திருமண வயத்தில் ஒரு பெண் இருக்கா... இரண்டு பசங்க படிச்சிட்டு இருக்காங்க...காக்கை இவ்வாறு தினமும் செய்வது எனக்கு ஏதாவது ஆயிடுமோ என்ற கவலை!
பெரியவா சொன்னார்கள்... தினமும் காக்கைக்கு சாதம் போடனும்... தினமும் நல்லெண்ணெய் விளக்கு போடனும்... சனிக்கிழமையன்று சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் பண்ணிடு வா கவலையெல்லாம் விரைவில் சரியாகும் என்றார்.
நிம்மதியாகச் சென்று விட்டார் அந்த அம்மையார். பிறகு தொண்டர்களிடம் பெரியவா பேசிக்கொண்டிருந்தார்..
நம்ம மடத்துக்கு யானை, பசு, பூனை, சில சமயம் நாய், பெருச்சாளி, எலி, குருவி, குரங்குன்னு அனைத்துப் பிராணிகளும் வருகின்றது. ஆனால், காகம் மட்டும் வரதில்லை...
அதற்கு ஒரு தொண்டர் சொன்னார், “பெரியவா பரமேசுவர ஸ்வரூபம். அதனால், சனீஸ்வரனுக்கு மடத்துக்குள்ளே நுழைய பயம்... தன் வாகனத்தைக் கூட அனுப்பறதில்லை...
பெரியவா புன்முருவல் பூத்தார்கள். பிறகு சொன்னார்கள்... அகத்திலே காக்கைக்குச் சாதம் போடுகிறபோது - காக்காய்...காக்காய்.. காகம், காகம்.. வா, வா -ன்னு கூப்பிடறதில்லை. அப்படித்தானே...
கா... கா.. ங்கிறா... அப்படின்னா என்ன அர்த்தம்?
எல்லோரும் விழித்தார்கள்.
காக்கா... சாப்பிட வா-ன்னு அர்த்தம்... என்று ஒரு தொண்டர் கூறினார்.
அதுதான் எல்லாருக்கும் தெரிஞ்சிருகே! வேற விசேஷ அர்த்தம் உண்டோன்னு கேட்டேன்.
எல்லாரும் மெளனமாக நின்றார்கள்.
கா...கா...ன்னா.. காப்பாற்று, காப்பாற்றுன்னு அர்த்தம்.. பித்ருக்கள் எல்லாரும் காக்கை ஸ்வரூபமா வருவதாக ஐதீகம். "கா...கா....ன்னா - பித்ருக்களே... எங்களை ரட்சியுங்கள்” என்று அர்த்தம் சொல்லலாமில்லையா?”
தொண்டர்கள் பிரமித்தார்கள்.
அது மட்டுமில்லை. பகவான் எல்லா ஜந்துக்களிடமும் ஆத்மாவாக இருக்கிறான். காக்கையிடமும் அப்படித்தான். பகவனுக்கு நிவேதனம் வைத்தால், அவன் சாப்பிடுவதை நம்மால் பார்க்க முடியாது. அவனே காகமாக வந்து, நாம் போட்ட சாதத்தைச் சாப்பிடுவதைப் பார்க்க முடிகிறது. எதோ ஒரு ஜீவன்... வினைப் பயனாக, காக்கையாப் பொறந்திருக்கு. அந்த ஜீவனுக்கு - நமக்குள் இருக்கிற அதே ஆத்மாவுக்கு - ஸ்வரூபம் வேறு - சாதம் போடுகிறோம். இது, அத்வைதம் தானே?
அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை, அடுப்பங்கரையிலும் இருக்கிறது என்று முடித்தார் பெரியவா!