ஒடிசா மாநிலம் பூரியில் உலக புகழ்பெற்ற ஜெகன்நாதர் ஆலயத்தில் 141-வது ரத யாத்திரை விழா இன்று தொடங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஒடிசாவில் புகழ்பெற்ற திருவிழாவாகப் பூரி ரதயாத்திரை நடைபெறும். ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த ரத யாத்திரையில் ஒடிசா மட்டுமல்லாது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இவ்விழாவில் பங்கேற்றுள்ளனர்.
ஜெகன்நாதருடன் அவரது சகோதரராக வழிபடப்படும் பாலபத்திர் மற்றும் சகோதரி சுபத்ரா தேவியும் தனித்தனி ரதங்களில் வலம் வருவதைக் காண பல்லாயிரக்கணக்கான மக்கள் பூரியில் திரண்டு தரிசனம் செய்வார்கள்.
இந்த ரதங்கள் அங்குள்ள கோயிலுக்கு கொண்டுசெல்லப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்காகத் தொடர்ந்து ஒன்பது நாட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
மோடி டிவிட்டர் மூலம் தெரிவித்த வாழ்த்துச் செய்தியில்,
ஜெகன்நாதரின் ஆசீர்வாதத்துடன் ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். நம் நாட்டின் வளர்ச்சி புதிய உச்சத்தை அடையட்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மங்கள ஆர்த்தி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்துள்ளார்.
மேலும் இந்தாண்டு ஜெகன்நாதர் ஆலய திருவிழாவை முன்னிட்டு மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஜெகன்நாதர் உருவத்தை கடற்கரை பகுதியில் மணல் சிற்பமாக வடிவமைத்துள்ளார். இந்த மணல் சிற்பத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியில் கூடியுள்ளனர்.
ரத யாத்திரை நடைபெறும் பகுதியில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.