ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் சேலத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேங்காய் சுடும் திருவிழா!

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் சேலத்தில் கோலாகலமாக நடைபெற்ற தேங்காய் சுடும் திருவிழா!

ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி சேலத்தில் தேங்காய் சுடும் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேங்காய் சுடும் திருவிழா சேலம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி அரிசிபாளையம், கச்சிபாளையம், கெங்கவள்ளி, சாமிநாதபுரம் என பல்வேறு பகுதியில் கொண்டாடப்பட்டது. 

சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல், கரூர் போன்ற காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் ஆடி மாதம் முதல் நாளையொட்டி ஆண்டுதோறும் தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. 

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று, ஆடி 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ம் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்தப் பூஜையின்போது படைக்கும் வகையில் தேங்காய் சுட்டு அதனைப் பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது. ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தைக் கடைப்பிடிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. 

புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதைத் தரையில் தேய்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தேய்க்கப்பட்டது. அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும். பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள். 

பின்னர், அந்தக் குச்சியை சுற்றி மஞ்சளைப் பூசி துளையை மூடுவர். அதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் மண் அடுப்பில் நெருப்பு மூட்டி அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவார்கள். ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் அதை அருகில் உள்ள பிள்ளையார் கோயில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கம். சிலர் வீட்டில் சாமி படத்தின் முன்பு படைத்து, பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள். இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com