செவ்வாய் பலம் கூடப் பெண்கள் இன்று அனுஷ்டிக்க வேண்டிய விரதம்!

தமிழ் மாதங்களில் "ஆடிக்கும், "மார்கழிக்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும்..
செவ்வாய் பலம் கூடப் பெண்கள் இன்று அனுஷ்டிக்க வேண்டிய விரதம்!

தமிழ் மாதங்களில் "ஆடிக்கும், "மார்கழிக்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்துள்ளனர். அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும்.

பொதுவாக ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. சரி ஆடி செவ்வாயில் கொண்டாடப்படும் அவ்வையார் நோன்பு எவ்வாறு கடைப்பிடிப்பது என்று தெரிந்து கொள்வோம்.

ஆடியில் வரும்  செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் தலை குளித்து அம்மனை வழிபட்டு வந்தால், திருமாங்கல்ய பலம் கூடும். இதுதவிர ஆடி செவ்வாயில் அவ்வையாருக்கு மேற்கொள்ளும் நோன்பு குறிப்பிடத்தக்கது. இந்த அவ்வை நோன்பைக் கடைப்பிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.

அவ்வை நோன்பு கடைப்பிடிக்கும் முறை

ஆடிச் செவ்வாயன்று நள்ளிரவில் பெண்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்த நோன்பைக் கடைப்பிடிப்பர். பச்சரி மாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரித்து படைப்பர். அன்றைய தினம் செய்யும் நிவேதனங்களில் உப்பு சேர்க்க மாட்டார்கள். அதன்பின் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள். 

பிறகு, அவ்வையாரம்மன் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பத்தியோடு கேட்பர். அதன்பின் ஒரு நீர் நிரப்பிய பாத்திரத்தில் மாங்கல்யத்தைக் காட்டுவார். நீரில் தெரியும் பிம்பத்தை மற்ற பெண்கள் வணங்குவர். கன்னியாகுமரி, தோவாளை அருகிலுள்ள சீதப்பால் அவ்வையார் அம்மன் கோயிலில், இந்த வழிபாடு சிறப்பாக நடக்கும்.

இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும், விரதமிருந்தவர்கள் உண்பார்கள். இந்த விரதம் ஆண்கள் யாரும் கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்த உடனேயே வழிபாடு செய்த இடத்தைத் தூய்மைப்படுத்தி விடுவார்கள். இந்த விரதம் ஒவ்வொரு ஆடி செவ்வாய்க் கிழமைகளில் ஒவ்வொருவரின் வீட்டில் கடைப்பிடிப்பர். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். திருமணம் கைகூடும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஆடிச் செவ்வாய் தேடிக்குளி என்ற பழமொழிக்கு ஏற்ப இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. செவ்வாய் கிரகம் சனிக் கிரகம்போல் ஒரு ஜாதகருக்குப் பெரும் தோஷத்தை ஏற்படுத்தக் கூடியது. செவ்வாய் சனி போன்ற பாவக் கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும் போது அதன் கதிர் வீச்சுக்கள் தீவிரமாக தாக்குகின்றன. இதனால் ஜாதகர் உடல், மன ரீதியாக பெரும் பாதிப்பைப் பெறுகின்றார். 

எனவே ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருத்தல் அவசியம். அவ்வாறு பலம் பெற்று இருக்கும் ஜாதகர் வாழ்வில் சகல வசதிகளும், அதாவது, சொந்த வீடு, வாசல், சொத்து என்று வசதியாக இருப்பர். 

செவ்வாய் பலம் இழந்து காணப்பட்டால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம், வாழ்க்கையில் பிரச்னை, திருமணத் தடை ஆகியவை ஏற்படும்.

செவ்வாய் பலம் பெற செய்யவேண்டியவை..

செவ்வாயின் பலம் வாழ்வில் மிகவும் அவசியம். செவ்வாய் தோறும் முருகப் பெருமானையும், துர்க்கையம்மனையும் பூஜித்து வந்தால் செவ்வாய் பலம் பெறும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாயன்று அவ்வையார் விரதம் இருக்க மாங்கல்ய பலம் கூடுவதோடு, செவ்வாயின் பலம் கூடும். அங்காரகனுக்கு செவ்வரளி மலர் சார்த்தி வழிபட வாழ்வில் முன்னேற்றம், செய்தொழில் வெற்றி கிடைக்கும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com