திருப்பதியில் படி உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
திருப்பதி அலிபிரி பகுதியில் உள்ள பாதாலு மண்டபத்தில் தாசா சாகித்ய திட்டம் மற்றும் தேவஸ்தானத்தின் அன்னமாச்சார்யா திட்டம் ஆகியவற்றின்கீழ், படி உற்சவத்தை நடத்தினர். இந்த நிகழ்வில், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, கோவிந்தராஜ சுவாமி கோயிலில் இருந்து பக்தர்கள் ஊர்வலமாக பஜனைப் பாடல்கள் பாடி, கோலாட்டம் ஆடிக் கொண்டு சென்று அலிபிரியில் உள்ள பாதாலு மண்டபத்தை அடைந்தனர். அங்கு குழுக்களாக இணைந்து முதல் படிக்கு மஞ்சள், குங்குமம், மலர் மாலை சாற்றி கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தனர்.பின்னர் பஜனைப் பாடல்களைப் பாடியவாறு படியேறி திருமலையை அடைந்து ஏழுமலையானை தரிசித்தனர். இந்த நிகழ்வில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
90,681 பக்தர்கள் தரிசனம்
ழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 90,681 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 37,559 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.
திருமலை, திருப்பதி, நடைபாதை மார்க்கங்களில் தர்ம தரிசன பக்தர்களுக்கு நேர ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை காலை நேர ஒதுக்கீடு முறை பக்தர்கள் 3 மணிநேரத்திலும், வைகுண்டம் காத்திருப்பு அறையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு 15 மணிநேரத்திற்குப் பின்பும் தரிசனம் அளிக்கப்படுகிறது.
தர்ம தரிசன பக்தர்கள் 29 காத்திருப்பு அறைகளில் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். நடைபாதை மார்க்கத்தில் வந்த முதல் 20 ஆயிரம்பக்தர்கள் (அலிபிரி 14 ஆயிரம், ஸ்ரீவாரிமெட்டு 6 ஆயிரம்) திவ்ய தரிசன டோக்கன் பெற்று ஏழுமலையானை தரிசித்தனர். விரைவு தரிசனம், நடைபாதை தரிசனம் உள்ளிட்டவற்றில் தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் டோக்கனில் குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றால் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்து திரும்பலாம்.