ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் இருக்கும் குருவால் ஏற்படும் நோய்களும் பரிகாரங்களும்..!

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி ஆக குருவின் அருள்பார்வை மிகவும் அற்புதமானது..
ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் இருக்கும் குருவால் ஏற்படும் நோய்களும் பரிகாரங்களும்..!

குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி ஆக குருவின் அருள்பார்வை மிகவும் அற்புதமானது ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு திருமணம் ஆக வேண்டுமெனில் இந்த குருவின் பலன் மிகவும் அவசியம் என்பது ஜோதிட ரீதியாகக் கூறப்படுகிறது. 

இன்னொரு பழமொழியும் உண்டு "அகப்பட்டவனுக்கு அட்டமத்தில் சனி ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு" ஆக கோட்சாரத்தில் ஒன்பதில் குரு இருந்தால் அவனுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது.  இந்த குரு பிறவி ஜாதகத்தில் லக்னத்தைப் பார்த்து நின்றால் அவனுக்கு எவ்வித சிறு கண்டம்கூட நிகழாது. பூரண ஆயுள் உள்ளவனாக இருப்பான். 

ஒரு மனிதன் எல்லா வளங்களையும் பெற்று அருமையாக வாழ வழிசெய்பவர். புகழுக்குக் காரகம் வகிப்பவர். இவர் ஜாதகத்தில் வலிமையுடன் திகழ்ந்தால் புகழ் உண்டாகும். இவர் புத்திரக்காரகர்.  மலட்டுத் தன்மையை போக்கி புத்திர பேற்றை அளிப்பவர். 

குருவினால் உண்டாகும் நோய்கள்..

இருதய சம்பந்தப்பட்ட நோய்களை உருவாக்குபவர். ஒருவர் ஜாதகத்தில் குருபலவீனமாக இருந்தால் இருதயம் சம்பந்தப்பட்ட மாரடைப்பு, வாய்வு கோளாறு, இரத்த அழுத்த நோய், இருதயத்தில் துவாரம்,  இருதயம் பலகீனமாகி அடிக்கடி களைப்பு, வேர்வைப் பெருகுதல் போன்ற நோய்கள் உண்டாகும். இவருக்குத் தக்க பரிகாரம் செய்தால் இந்த நோயிலிருந்து விடுதலைப் பெற முடியும். 

என்னதான் மருத்துவர்கள் நன்றாகப் படித்து அனுபவம் பெற்றிருந்தாலும் ஒரு உயிரைக் காப்பாற்றச் சொல்லி உறவினர்கள் கதறி அழும்போது எல்லாம் என் கையில் என்ன இருக்கிறது? கடவுள் கண்  திறக்க வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். அதாவது அவர்களை மீறிய செயல் அவ்வப்போது உலகில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பெரும்பாலும் ஜாதகங்களில் இந்தக் குருவை வைத்தே அதிக பலன் சொல்லப்படுகிறது. குரு ஓரு ஜாதகத்தில் உச்சத்திலிருந்தால் பொன்நககைக்ள அவரிடம் குவிந்திருக்கும். புகழ் அபரிமிதமாக  இருக்கும். பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறை குறிஞ்சிப் பூப் பூத்தாற்போல இவர் உச்சத்தில் இருப்பார். 

குருவின் முக்கியமான இன்னொரு உறுப்பு லிவர் எனச் சொல்லப்படும் ஈரல். இதுவும் அதிகமாகப் பாதிக்கப்படுபவர்களுக்கு குருவின் பலவீனம்தான் காரணம். மஞ்சள் காமாலை நோய் பீடிக்கப்படுபவர்கள்  இந்த ஈரல் கெடுவதால் தான் பாதிக்கப்படுகிறார்கள். 

பரிகாரம்

இருதயம், ஈரல் இவை பாதிக்கப்பட்டவர்கள் மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் துணி கிடைக்கவில்லை என்றால் வெள்ளைத் துணியில் மஞ்சளை பூசிக்கொள்ளலாம். அந்தத் துணியை  ஒன்பது துண்டுகளாக ஆக்கிக்கொள்ள வேண்டும். பின் அந்த ஒவ்வொரு துண்டிலும் கொஞ்சம் கொண்டைக் கடலையை வைத்து முடிந்துகொள்ள வேண்டும். அப்படி ஒன்பது துணியிலும்  முடிந்துகொண்டபின் ஒரு புதன் கிழமை இரவில் இருந்து இந்தப் பரிகாரத்தை ஆரம்பிக்க வேண்டும். 

புதன்கிழமை இரவில் படுக்கப்போகும் முன் ஒரு துண்டை தலையணைக்கடியில் வைத்துப் படுத்துக்கொள்ள வேண்டும். பின் காலை எழுந்தவுடன் கை, கால், முகம் கழுவி முடிந்தால் குளித்து விட்டு  அதைக் கையில் எடுத்து என் பிரச்னை, நோய் தீர வேண்டுமென மனதார பிரார்த்தித்து பத்திரமாக அதை ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும். இப்படியே தொடர்ந்து ஒன்பது நாட்கள்  செய்ய வேண்டும். ஒன்பது நாட்கள் இவ்வாறு செய்து முடித்த பின் அதை ஏதாவது ஒரு கோவியில் சென்று போட்டுவிடவும். அப்படி முடியாவிட்டால் நீர் நிலைகளில் எறிந்துவிடலாம்.

இன்னொரு முறை, குருவுக்கு உகந்த நாளான வியாழக்கிழமையில் கொஞ்சம் கொண்டைக் கடலை, மஞ்சள் துண்டு, முல்லை மலர் இவற்றைக் கொண்டு போய் நவக்கிரகத்தில் இருக்கும்  குருபகவானுக்கு பெயர் நட்சத்திரம் ராசி சொல்லி மூன்று வியாழக்கிழமை அர்ச்சனை செய்துவர நோய் குணமாகும். நோய் அதிகமாக இருப்பின் ஆலங்குடி சென்று குருவின் அருளைப் பெற்று வரலாம். 

குருவுக்குக் கொண்டை கடலையை மாலையாகச் சாற்றி வழிபட குரு பகவான் அகமகிழ்ந்து கெடுதலைக் குறைத்துக்கொள்வார் என்பது உறுதி. விரைவில் திருமணம் கைகூடும். இவரை சந்தோஷப்படுத்தும்  பரிகாரத்தைச் செய்பவர்களை நிச்சயம் நல்வழிப்படுத்துவார். 

ஒருவர் ஜாதகத்தில் இந்த குருபகவான் உச்சம் பெற்று பலமுடன் இருந்தால் அவர் முதலில் சில வேண்டாத பழக்கங்களில் ஈடுபட்டிருந்தாலும் வெகு விரைவில் திருந்தி மாறிவிடுவார்கள். நல்ல  பண்புகள், பிறருக்கு உதவும் மனப்பான்மை உண்டாகும். 

இதற்கு உதாரணம்- இளையராஜாவிற்கு கடகத்தில் உச்சத்திலிருக்கும் குருபகவான் அவரது திசையை நடத்துவதால்தான். அதே போல ராஜனிகாந்த்க்கும் குரு நல்ல இடத்தில் இருந்து அந்தக் குருவின்  திசை நடப்பதால் தான் அவரும் எல்லா பழக்கங்களிலும் வெளிவந்து ஆன்மிகத்தில் லயித்து மக்களிடையே செல்வாக்கு பெற்றதும். யோகாசனம், தியானம் என்ற ஆத்ம விஷயங்களுக்கும் இவரே  காரணம். 

குருவின் அருளைப் பூரணமாகப் பெறுவதால் எல்லா நன்மையும் பெற்று நலமுடன் அமைதியாக வாழலாம். பெரிய அதிகாரிகள், பெரிய மனிதர்கள் தொடர்பு ஏற்படவும் அதன்மூலம் வாழ்க்கை ஏற்றம்  பெறவும், தலையணைக்கடியில் மூக்குக் கடலை முடிச்சை வைத்து பரிகாரம் செய்வது நன்றபலன் கொடுக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com