மதுராந்தகத்தை அடுத்த மாரிபுத்தூர் செல்லியம்மன் கோயிலின் ஆடித் திருவிழா வரும் 24ஆம் தேதி தொடங்குகிறது.
மாரிபுத்தூர் செல்லியம்மன் தாங்கள் வேண்டியதை நிறைவேற்றுவதாகவும், மாட்டுத் தலையை மான் தலையாக்கிய சக்தியைக் கொண்டிருப்பதாகவும் பக்தர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இந்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடித் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி மேளதாளம் முழங்க, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
அதன் பின் இரவு 9 மணிக்கு அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 24ஆம் தேதி அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. அன்று இரவு 9 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறும். திருத்தேரில் சிறப்பு அலங்காரத்துடன் செல்லியம்மன் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வருவார். மறுநாள் (25ஆம் தேதி) மாலை 4 மணிக்கு திருத்தேர் நிலைக்கு வந்து சேரும். 26ஆம் தேதி, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு மேடை நாடகம், ஆன்மிகச் சொற்பொழிவு, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும்.
ஒவ்வோர் ஆண்டும் ஆடித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த ஆண்டும் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மதுராந்தகம் அரசுப் போக்குவரத்து பணிமுனை மூலம் ஏராளமான சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செல்லியம்மன் நற்பணி மன்ற நிர்வாகிகளும், விழாக் குழுவினரும் செய்துள்ளனர்.