மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் குழந்தைகளின் அழுகுரலைக் கட்டுப்படுத்த இலவச பசும்பால் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான கோயில்களில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில், கோயிலுக்குத் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அச்சமயத்தில் 3 வயத்துக்குட்பட்ட குழந்தைகள் பசியால் அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் நிலை ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளின் பசியைப் போக்க இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் முதல்முறையாக மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் செயல்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து கோயில் இணை ஆணையர் நடராஜன் கூறுகையில்,
கோயில் தரிசனத்திற்கு வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளோடு நிம்மதியாகச் சுவாமி தரிசனம் செய்வதற்காகவே இந்த இலவச பசும்பால் வழங்கும் திட்டத்தை துவக்கியுள்ளனர். இந்தத் திட்டம் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தினமும் அபிஷேகத்திற்குப் போக மீதம் உள்ள 20 லிட்டர் பசும்பாலை 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கி வருகின்றோம். மேலும், தாய்மார்கள் தாய்ப்பால் கொடுக்க விரும்பினால் அருகேயே தாய்ப் பால் புகட்டும் அறையும் அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.