செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கோட்டையில் உள்ள கடும்பாடி அம்மன் கோயிலில், வெள்ளிக்கிழமை தீமிதி விழா, அம்மன் வீதி உலா நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடித் திருவிழா, செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. விரதமிருந்து காப்பு கட்டியவர்கள் கரகம் எடுத்து கங்கை நீர் திரட்டி ஊர்வலமாக வந்தனர். பின்னர், தீமிதி விழா நடைபெற்றது. இதில், ஏராளமானோர் விரதமிருந்து வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் தீ மிதித்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். முக்கிய வீதிகள் வழியாக வந்த உற்சவர் அம்மனுக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.