ஜோதிடத்தின் ஏழாவது ராசி துலாம். தமிழ் மாதங்களில் ஐப்பசி மாத துவக்கம் இந்த ராசியில் தான் ஆரம்பமாகும். துலாம் ராசியின் அதிபதி, பிருகு முனிவரின் புத்திரன், அசுர குரு என்றெல்லாம் போற்றப்படும் சுக்கிர பகவான்.
சுக்கிரன் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்படுகிறது. ராசி வரிசையில் பெண் ராசி. பஞ்ச பூத தத்துவங்களில் காற்று ராசி. இந்த ராசியில் ஆண்கள் பிறந்தாலும் பெண் தன்மை நிறைந்தே இருக்கும். அதாவது நளினம், விட்டுக்கொடுக்கும் சுபாவம், மென்மை கலந்தே இருக்கும்.
துலா ராசியில் பிறந்தவர்கள், குணத்திற்கேற்ப மற்றவர்களை எடை போடுவதில் வல்லவர்கள். நன்றி மறவாத குணம் உள்ளவர்கள். நிறைய சம்பாதித்து நிறையச் செலவு செய்வார்கள். இவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்பே மெல்லிய புன்னகை வந்துவிடும். நேர்மை தவறாத இவர்களுக்கு நேர்மை தவறினால் கோபம் வரும். அழகை ஆராதிக்கும் இவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். பலகலை வித்தகவர்கள். அனைவருக்கும் அன்பானவர்கள்.
மேஷத்தில் சூரியன் உச்சம் பெறும் போது துலாம் ராசியில் நீசம் பெறுகிறார். அப்போது, துலா ராசியில் ஏற்படும் பலன்கள் என்ன என்பதைப் பற்றி பார்ப்போம்.
• எதிர்பாலின மக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டாலும் அவர்களால் சில மனக்கசப்புகள் நேரிடலாம். அவ்வப்போது மனோபலம் குறையும்.
• எதையும் செய்து முடிக்கும் திறமை கொண்ட இவர்கள் குழப்பமின்றி தெளிவான முடிவுகளை எடுக்கக்கூடியவர்கள்.
• இறை நம்பிக்கையும் சாஸ்திரங்கள் மீது மிகுந்த ஈடுபாடும் கொண்டவர்கள். மரியாதை இல்லையெனில் அந்த இடத்தில் தலைவைத்தும் படுக்கமாட்டார்கள்.
• பிறரின் தன்மை அறிந்து அதற்கேற்றார் போல் பழகக்கூடியவர்கள் இந்த ராசிக்காரர்கள். பிரச்னைகளில் அமைதியான முறையில் தீர்வை எதிர்பார்க்கக்கூடியவர்கள். தேவையில்லாத வம்பு தும்புக்கு எல்லாம் போகமாட்டார்கள்.
• சொகுசான வாழ்க்கையை வாழக்கூடியவர்கள். தேவையற்ற குழப்பங்களால் அவ்வப்போது உடல் நலம் பாதிக்கப்படும். தாயின் மீது மிகுந்த அன்பு உடையவர்கள் இந்த ராசிக்காரர்கள்.
• துலாம் ராசியில் பிறந்தவர்கள் ஐப்பசியில் எந்த சுப காரியங்களையும் தவிர்ப்பது நல்லது.