கும்பகோணம் - தஞ்சை சாலையில் அய்யம்பேட்டை அடுத்து உள்ளது இந்த தாழமங்கை. பிரதான சாலையில் வலது புறம் கிழக்கு நோக்கிய சிறிய கோயிலாக உள்ளது இந்த தாழமங்கை சிவாலயம்.
சப்த மங்கை தலங்களில் திருச்சக்கராப்பள்ளியை முதன்மையாக வைத்து தலங்கள் அறியப்படுகின்றன. அரியமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசுமங்கை, தாழமங்கை, புள்ளமங்கை என சப்த மங்கைகள் ஆவார்.
சோழர்களுக்கு முன் ஆண்ட முத்தரையர்கள் காலத்து கோயில். இக்கோயிலுக்குக் கிழக்கிலுள்ள திருக்குளத்தில் பூர்ண சந்திரனின் கிரணங்கள் பிரதிபலித்து கோயிலுள்ள இறைவனைப் பூஜித்ததால் இறைவனின் திருநாமம் சந்திரமௌலீஸ்வரர் என்றாயிற்று என்கிறது தலபுராணம்.
செந்தலைத் தூண் கல்வெட்டுக்களில் காணப்படும் நித்தவினோதவளநாட்டு கிழார் கூற்றத்து பவதாயமங்கலமே மருவி இன்று தாழமங்கை எனப்படுகிறது. இதனை ஒட்டியே சுவடழிந்து போன சங்க காலம் தொட்டுப் புகழ்பெற்ற பெருநகரமான கிழார் இருந்திருக்கிறது.
கோயில் சிறியது தான் என்றாலும் கீர்த்தி மிக்கது. இங்குள்ள இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை ராஜராஜேஸ்வரி தெற்கு நோக்கியும் உள்ளார்கள். புண்ணிய லோகத்தில் இருந்து பஞ்ச தேவியர்களால் தருவிக்கப்பட்ட தெய்வீக மரம் இரண்டு இக்கோயிலிலுள்ளது. அதனை தம் வாழ்நாளில் ஒவ்வொருவரும் கண்டு வணங்கிடுவது பெரும் பாக்கியமாக சொல்லப்படுகிறது.
புண்ய புண்யாய புண்யத்வ புண்யமாச்ரா புண்யஸ்வரூபாய தீமஹி தந்னோ புண்ய விருட்சப் ப்ரசோதயாத்..
காசியிலிருந்து வந்த நாதன்சர்மா அனவித்யை தம்பதியர் வேண்டுதலுக்கு இணங்கி பெண்களின் ஏழு பருவங்களில் ஆறாவதான தெரிவை வடிவில் அம்பிகை காட்சி அருளிய தலம்.
இந்திராணி - ஐந்தீரி எனப்படுபவள். நான்கு தந்தங்களுடைய வெள்ளயானையை வாகனமாகக் கொண்டவள். இந்திர நீலக்கல்லின் நிறம். 1000 கண்களுடைய இவள் கரத்தில் வஜ்ராயுதம், பாசம், அங்குசம், தாமரை, அபயவரத முத்திரையுடன் காட்சி தருபவள். தாமரை மலரில் வீற்றிருப்பவள்.விரும்பும் ஆடவரை மணக்க அருள் புரிவாள். சிவனை நோக்கித் தவமிருந்து இந்திரனை கணவனாய் அடைந்தாள்.
சந்தனம் பூசி, பலாச்சுளை நிவேதனம் செய்தால் நன்மை பல உண்டாகும். சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடச் சிறந்தது. சுக்கிர தோஷம் நீங்கும். இந்திராணி ரூபலக்ஷ்ணம் கொண்டவள், இவளை வணங்கினால் சொத்து சுகம் சேரும் உபாசித்தால் பதவிகளை அடையலாம்.
சப்த மங்கைகள் தரிசித்த இந்த ஏழு தலங்களுக்கும் பார்வதி வந்தபோது இறைவன் சிறப்பு காட்சி தந்ததார்.
அவை..
1. நெற்றிக்கண் தரிசனம்,
2. கங்காதேவி தரிசனம்,
3. திரிசூல தரிசனம்,
4. பாத தரிசனம்,
5. உடுக்கை தரிசனம்,
6. மூன்றாம்பிறை தரிசனம்,
7. நாக தரிசனம் எனப்படும்.
சக்ரப்பள்ளி சப்தஸ்தான ஏழூர் திருவிழா இரண்டு நாட்கள் பங்குனிமாதம் சித்திரை நடசத்திரத்தன்று புஷ்ப பல்லக்கில் சக்கரவகீஸரும், வேதநாயகியும் எழுந்தருள, வெட்டிவேர் பல்லக்கில் நாதன்சர்மா-அனவித்யை தம்பதிகளுடன் புறப்பட்டு ஆறு தலங்களுக்கும் சென்று திரும்பும்.
- கடம்பூர் விஜயன்