கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை (ஜூன் 20) நடைபெறுகிறது.
இந்தக் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்று முதல் தினமும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள்கிழமை தங்க கைலாச வாகனத்தில் வீதி உலாவும், செவ்வாய்க்கிழமை தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. சித் சபையில் வீற்றுள்ள நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித் தனி தேர்களில் வீதி உலா வருகின்றனர்.
அதிகாலை 5.30 மணியளவில் நடராஜ மூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உள்ளிட்ட சுவாமிகள் தேரில் எழுந்தருளுகின்றனர். தொடர்ந்து தேரோட்டம் நடைபெறும்.
இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
ஆனித் திருமஞ்சன தரிசனம்: வியாழக்கிழமை (ஜூன் 21) சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித் சபா பிரவேசமும் நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை பஞ்ச மூர்த்திகள் முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.