சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

பஞ்சபூத தலங்களில் ஒன்றான, சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்.
சிதம்பரத்தில் புதன்கிழமை நடைபெற்ற நடராஜர் கோயில் தேரோட்டம்.

பஞ்சபூத தலங்களில் ஒன்றான, சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். 
வீதிவலம் வந்த 5 தேர்கள்: திருத்தேர் விழாவை முன்னிட்டு, சித்சபையில் அமைந்துள்ள மூலவர்களான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி, உற்சவ மூர்த்திகளான சுப்பிரமணியர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித் தனித் தேர்களில் அதிகாலை எழுந்தருளினர். பின்னர், கீழ வீதி தேரடி நிலையிலிருந்து காலை 8 மணிக்கு தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் புறப்பட்டன. தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாகச் சென்று மாலையில் கீழ வீதி தேர் நிலையை வந்தடைந்தன.
உழவாரப்பணி, திருமுறை இன்னிசை: தேர் செல்லும் வீதிகளில் இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவினர், தில்லைத் திருமுறைக்கழகம், அப்பர் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சிவனடியார்கள் உள்பட திரளான பெண்கள் வீதிகளைச் சுத்தம் செய்து, கோலமிட்டு உழவாரப் பணியை மேற்கொண்டனர். தேர்களுக்கு முன்பாக, ஓதுவார்கள் திருமுறை இன்னிசை ஆராதனையை நிகழ்த்தியபடி சென்றனர்.
மண்டகப்படி: மீனவ சமுதாயத்தில் பிறந்த பார்வதி தேவியை சிவபெருமான் திருமணம் செய்து கொண்டார் என்பதால், தாய் வீட்டுச் சீதனமாக தேர்த் திருவிழாவின் போது அவர்கள் சீர் வரிசை அளிப்பது வழக்கம்.
அதன்படி, முன்னதாக மேலவீதி கஞ்சித்தொட்டி அருகே மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் நடராஜருக்கும், அம்பாளுக்கும் சீர்வரிசை அளித்து, பட்டு சாத்தி சிறப்பு தீபாராதனை செய்து மரியாதை செலுத்தும் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், தேரோட்டம் நடைபெற்றது. இரவு நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் தேரில் இருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டபம் சென்றனர். அங்கு இருவருக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.
இன்று மகாபிஷேகம், ஆனித் திருமஞ்சன தரிசனம்: வியாழக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்னர் ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும், புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறும். 
இதையடுத்து, பஞ்சமூர்த்திகள் வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்குள் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி நடராஜமூர்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசனக் காட்சியளித்து, சித்சபை பிரவேசம் செய்கின்றனர். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com