ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சித்தியடைந்த பிருந்தாவனத்தில் மார்ச் 13-ஆம் தேதி முதல் ஆராதனை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.
காஞ்சி மடாதிபதி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்ரவரி 28-ஆம் தேதி சித்தியடைந்தார். இதையடுத்து, அவரின் திருவுடல் அபிஷேக, ஆராதனைகளுடன் பிருந்தாவன பிரவேசம் செய்யப்பட்டது. சித்தியடைந்த ஸ்ரீஜயேந்திரரின் திருவுடலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். இந்நிலையில், தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், ஆந்திரம், கர்நாடகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அவரது பிருந்தாவன சமாதியைக் காண வந்தவண்ணம் உள்ளனர். அதோடு, மடத்தின் வழக்கமான கடமைகள், செயல்பாடுகளை சங்கர மடத்தின் 70-ஆவது பீடாதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்த பொறுப்பேற்பு நிகழ்வானது மிகவும் எளிமையாக நடந்துள்ளது. எனவே, தொடர்ந்து பக்தர்கள் ஸ்ரீஜயேந்திரரின் சமாதியைக் காண வந்தவண்ணம் உள்ளதால், அடுத்த 10 நாள்கள் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பீடாதிபதி பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, மார்ச் 13-ஆம் தேதி சங்கரமடம் வளாகத்தில் ஸ்ரீஜயேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் அடைந்துள்ள இடம் அலங்கரிக்கப்பட்டு, ஸ்ரீஜயேந்திரர் சந்நிதியில் முதல் ஆராதனை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.