காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மார்ச் 3-ஆம் தேதி தொடங்கிய 3 நாள் தவன உற்சவம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.
பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் மாசி மாதத்தில், ஆண்டுதோறும் 3 நாள்கள் பெருமாள் இளைப்பாறும் விதமாக நடைபெறும் தவன உற்சவம் (மார்ச் 3) சனிக்கிழமை தொடங்கியது.
இந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள் சுக்கிர வார மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடக்க நாளன்று, காலை கண்ணாடி அறையில் பெருமாள் எழுந்தருள, அங்கு அவருக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
தொடர்ந்து, பூஜைகள் நிறைவடைந்து மாலை சுக்கிர வார மண்டபத்துக்குச் சென்றார். ஞாயிற்றுக்கிழமையும் கண்ணாடி அறையில் அருள்பாலித்த பெருமாள் மாலையில் மண்டபத்துக்குச் சென்றார். மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை, 10 மணியளவில் தேவியர்களுடன் சுக்கிர வார மண்டபத்துக்கு பெருமாள் எழுந்தருளினார். அங்கு அவர்களுக்கு திருமஞ்சனம், சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, மாலையில் தாயாருடன் வரதர் கோயில் வளாகத்தில் உள்ள தோட்டத்தில் எழுந்தருளினார்.
இதையடுத்து, ஆழ்வார் பிராகாரம் வழியாக மீண்டும் கண்ணாடி அறைக்கு திரும்பினார். இந்த தவன உற்சவத்தில் திரளான பக்தர்களுக்கு கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.