திருமலையில் உள்ள உணவகங்களில் உணவுகளின் விலை பட்டியலை கட்டாயம் வைக்க வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருமலையில் உள்ள உணவகங்களில் உணவுகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக சித்தூரைச் சேர்ந்த அரிஹர சேவா சமிதியினர் ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், உடனடியாக இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். அதன்படி, திருமலையில் உள்ள உணவகங்களில் கட்டாயம் விலை பட்டியலை வைக்க வேண்டும் என தேவஸ்தானம் உத்தரவிட்டது. அதனை மீறுபவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில், சிலர் போலி விலை பட்டியலை தயாரித்து குறைந்த விலையில் வைத்து பக்தர்களுக்கு அதிக விலைக்கு உணவுப் பண்டங்களை விற்று வருவதாகக் கூறப்படுகிறது. அதனால் கடந்த 2 நாள்களாக வருவாய்த் துறை அதிகாரிகள் திருமலையில் உள்ள உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்தி வருகின்றனர். போலி விலைப் பட்டியல் வைத்திருக்கும் உணவகங்கள் குறித்து பக்தர்கள் புகார் அளித்தால், தேவஸ்தானம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.