திருவள்ளூர் அருகே நரசிங்கபுரம் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி நட்சத்திர தினத்தையொட்டி, உற்சவருக்கு செவ்வாய்க்கிழமை திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருவள்ளூரை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில், பெருமாள் பிறந்த சுவாதி நட்சத்திர தினத்தன்று மாதந்தோறும் உற்சவருக்கு திருமஞ்சன நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்துக்கான திருமஞ்சன நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் திங்கள்கிழமை இரவு முதலே திருக்கோயில் வளாகத்தில் குவிந்தனர்.
பின்னர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கோ பூஜை, யாக பூஜையுடன் திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பக்தர்கள் நெய் விளக்கேற்றி, திருக்கோயில் வளாகத்தை சுற்றி வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.
இதையடுத்து, உற்சவர் நரசிம்ம பெருமாள் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்தார். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.