காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோர் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனர்.
சித்தியடைந்த காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திரரின் முதல் ஆராதனை உற்சவத்தில் பங்கேற்பதற்காக ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜே, பாஜக மூத்த தலைவரும், எம்.பி.யுமான முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் காஞ்சிபுரம் வருகை புரிந்தனர்.
முன்னதாக, காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு அவர்கள் வந்தனர். அப்போது, காமாட்சியம்மன் கோயில் ஸ்தானீகர் நடராஜ சாஸ்திரி, ஸ்ரீகார்யம் விஸ்வநாத சாஸ்திரி ஆகிய இருவரும் அவர்களை வரவேற்று, மரியாதை செய்தனர்.
பின்னர், காமாட்சியம்மன் சன்னிதிக்கு அழைத்துச் சென்று சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
இதையடுத்து, இருவருக்கும் காமாட்சியம்மனின் திருவுருவப் படம், பிரசாதம் ஆகியவை வழங்கினர்.
பின்பு, முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு வருவது மனதில் பக்தியை பெருகச் செய்கிறது என்றார்.
இக்கோயிலுக்கு வருகை புரிந்ததை மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என கோயில் பதிவேட்டில் வசுந்தரா ராஜே எழுதியிருந்தார்.