பௌமன் என்றால் பூமியின் புதல்வரான செவ்வாய் கிரகத்துக்கு பெயர். செவ்வாய் கிரகத்தின் கிழமையான செவ்வாய்க்கிழமையும் அஸ்வினி நட்சத்திரமும் ஒன்றாக இணையும் நாள் பௌமாஸ்வினி புண்யகாலம் எனப்படுகிறது.
மிகவும் அரிதான இந்த நன்னாளில் செய்யப்படும் அனைத்து நற்செயல்களும் அதிகமான விரைவான நன்மையைத் தரும். குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி நட்சத்திரமும் ஸ்ரீ நரசிம்மரை தேவதையாகக் கொண்ட செவ்வாய்க் கிழமையும் ஒன்று சேரும் இந்த நாளில் நவக்கிரகங்களில் செவ்வாய்க்குரிய ஸ்ரீயோக நரசிம்ம ஸ்ரீ மஹாவிஷ்ணுவை பூஜிக்க வேண்டும்.
இன்று ஸ்ரீயோக நரசிம்மர் படத்தை வைத்து தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து தயிர் சாதமும், பானகமும் நிவேதனம் செய்து அதை சுமார் 8 வயதுக்குள் உள்ள குழந்தைகளுக்குத் தந்து சாப்பிடச் செய்யலாம்.
மேலும், எப்போதும் ஆத்ம விசாரம் செய்துகொண்டு த்யானம் செய்து கொண்டிருக்கும் ஞானிகளை (அவரது சமாதியை) நமஸ்கரித்து அனுக்ரஹம் பெறலாம், இதனால் சிறந்த ஞாபக சக்தியும் படிப்பில் அறிவில் முன்னேற்றமும் கிடைக்கும்.
இன்று இன்னொரு விஷேசம்....
மத்ஸ்ய ஜெயந்தி (20.03.18) - பகவான் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரம் எடுத்த நாள் இன்று. இதை மத்ஸ்ய ஜெயந்தி என்று அழைக்கிறோம். மத்ஸ்ய என்றால் மீன் என்று அர்த்தம். சத்திய மிருதன் என்ற மகாராஜாவுக்கு உபதேசம் செய்யவேண்டி பகவான் எடுத்த அவதாரம் தான் மச்ச அவதாரம் என்று புராணங்கள் கூறுகின்றன.
இந்த நன்னாளில் மகாவிஷ்ணுவான ஸ்ரீயோக நரசிம்மரை பூஜித்து, நரசிம்ம ஸ்தோத்திரங்களை உச்சாடனம் செய்தால் வீரம் தோன்றும், சரிர பலம் கூடும், மனோபலம் ஏற்படும், சத்ரு பயம் நீங்கும்.