காஞ்சிபுரம், மார்ச் 19: பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் வேதமந்திரங்கள் முழங்க புதன்கிழமை (மார்ச் 21) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
இதனை முன்னிட்டு அன்று அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் பவழக்கால் சப்பரத்தில் உற்சவமூர்த்தி எழுந்தருள்கிறார்.
அங்கு வேதமந்திரங்கள் முழங்க, நந்திக் கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, ஏகாம்பரநாதர் சிம்ம வாகனத்திலும், ஏலவார் குழலி தாயார் கிளி வாகனத்திலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நாள்தோறும் சூரிய பிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், சேஷ வாகனம், வெள்ளி இடப வாகனம், கைலாச பீட இராவண வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, அறுபத்து மூன்று நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளல், வெள்ளித் தேர் பவனி நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 27-இல் தேரோட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, ஆறுமுகப் பெருமான் ரத ஊர்வலம், ஆள்மேல் பல்லக்கு, மாவடி சேவை, சபாநாதர் தரிசனம் நடக்கிறது.
30-ஆம் தேதி பங்குனி உத்திரத்தன்று இரவு திருக்கல்யாண உற்சவமும், 31-ஆம் தேதி அதிகாலை 5.30 மணியிலிருந்து 6 மணிக்குள் தங்க நந்தி வாகனத்தில் உற்சவர் எழுந்தருள்கிறார்.
கந்தப்பொடி உற்சவம், நூதன வெள்ளி உருத்திரகோடி விமான சேவை, புருஷாமிருக வாகனம், பஞ்சமூர்த்திகள் பவனியுடன் ஏப்ரல் 3-ஆம் தேதி உற்சவ சாந்தி, 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகம் மற்றும் பொன்விமானத்தில் திருமுறை உற்சவத்துடன் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.