காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்தர திருக்கல்யாண பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் நேற்று விமரிசையாகத் தொடங்கியது.
பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்தர பிரம்மோற்சவ இடபக் கொடியேற்றம் மார்ச் 21 அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் வேதமந்திரங்கள், மேளதாளம் முழங்க சிறப்பாக நடைபெற்றது.
இதையொட்டி மூலவர், உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பவழக்கால் சப்பரத்தில் உற்சவர் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பிரம்மோற்சவத்தையொட்டி காலை, மாலை என இருவேளையும் சிறப்பு அலங்காரத்தில் ஏலவார் குழலி அம்மன் சமேத ஏகாம்பரநாதர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.
முக்கிய நிகழ்வாக வரும் திங்கள்கிழமை (மார்ச் 26) 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளல், 27-ம் தேதி தேரோட்டம், 29-ம் தேதி வெள்ளி மாவடி சேவை, 30-ம் தேதி பங்குனி உத்தர திருக்கல்யாணமும் விமரிசையாக நடக்கிறது.
தொடர்ந்து ஏப்ரல் 3-ம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.