சந்தான பாக்கியம் அருளும் சந்தான ஸப்தமி விரதம்

நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என...
சந்தான பாக்கியம் அருளும் சந்தான ஸப்தமி விரதம்

நாம் பல பண்டிகைகளையும் விஷேச தினங்களையும் கொண்டாடியும் அனுசரித்தும் வருகிறோம். அதை எதற்காக செய்கிறோம் என பொருளணர்ந்து செய்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். ரதஸப்தமி பற்றி நாம் அறிவோம். சந்தான ஸப்தமி பற்றி தெரியுமா உங்களுக்கு? சந்தான ஸப்தமி எதற்காக கொண்டாடி வருகிறோம் என அறிந்தால் நம் முன்னோர்களின் தீர்க்க தரிசனத்தையும் அறிவையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது.

ஒவ்வொரு தினத்துக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. பங்குனி மாதத்தில் வளர்பிறை எனும் சுக்ல பக்‌ஷத்தில் வரும் ஸப்தமி திதியை 'சந்தான ஸ்ப்தமி' என்றும் கூறுவர்.  மேலும் வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வந்தால் அதனை கமல ஸப்தமி என்றும் புரானங்களில் போற்றப்படுகிறது.

உலகத்தின் உயிராகச் சூரியதேவன் விளங்குகிறார். வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜுர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதயநோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. மிகப்பழங்காலத்தில் சூரியவழிபாடு வடமாநிலங்களில் பரவி இருந்த காலத்தில் வன்முறை வழிபாடாக சூரியனுக்கு ரத்தத்தை அர்க்கியமாக(கைகளில் வார்த்து சூரியனுக்குச் சமர்ப்பித்தல்) இருந்து வந்தது தெரிகிறது.

பார்வையருளும் கமல ஸப்தமி

கண்களை தாமரை மலரோடு ஒப்பிடுவர். தாமரை மலர சூரியனின் வெளிச்சம் அவசியம். அதேபோல கிராமங்களில் குழந்தைகளை காலை சூரிய வெளிச்சத்தில் கண்களின் மீது சூரிய வெளிச்சம் படுமாறு வைத்திருப்பார்கள். ஜோதிடத்தில் சூரியன் வலது கண்ணுக்கும் சந்திரன் இடது கண்ணுக்கும் காரக கிரகங்களாக அமைந்துள்ளனர். இரண்டாம் வீடு வலக்கண்ணையும் பன்னிரெண்டாம் வீடு இடக்கண்ணையும் குறிக்கும் பாவங்களாகும். இரண்டாம் இடத்திலும் - பன்னிரெண்டாம் இடத்திலும் பாவ கிரகங்கள் இருந்து இந்த இடத்து பலமில்லாமல் இருந்து சூரியனும் சந்திரனும் பாதிக்கபட்டு இருந்தாலும் அந்த ஜாதகனுக்கோ அல்லது ஜாதகிக்கோ கண் சம்பந்தமான குறைபாடுகள் உண்டாகும் 

சூரியன் லக்னத்தில் அமைவது கண்களை பாதிக்கும் என்கிறது மருத்துவ ஜோதிடம். சூரியன் மேஷ லக்னத்தில் உச்சம் பெற்று இருந்தால் கண்களில் எரிச்சல் ஏற்படும். மேஷம் செவ்வாயின் வீடு என்பதால் கண்களில் உஷ்ணத்தால் ஏற்படும் எரிச்சல் ஏற்படும். சூரியன் சிம்ம லக்னத்தில் ஆட்சி பெற்று இருந்தால் மாலைக்கண் நோய் ஏற்படும். சூரியன் கடகத்தில் லக்னத்தில் இருந்தால் கண்களில் பீளையும் நீரும் வடியும். மேலும் கண் புரை நோய் ஏற்படும்.

சூரியன் துலா லக்னத்தில் நீசம் பெற்றிருந்தால் பார்வையிழப்பு ஏற்படும். சூரியன் இரண்டாம் வீட்டில் நிற்பது, இரண்டாம் வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் நிற்பது, அசுப தொடர்பு பெற்ற சந்திரன் இரண்டாம் வீட்டில் நிற்பது போன்றவை பார்வை இழப்பை ஏற்படுத்தும். .சூரியனும் சந்திரனும் இணைந்து இரண்டாமிடத்தில் நிற்பது மாலைகண் நோயை ஏற்படுத்தும்.

இதுபோன்ற ஜாதக அமைப்பு உடையவர்கள் கமல ஸப்தமியில் சூரிய பகவானை வணங்கி வர பார்வை கோளாருகள் நீங்கும். பார்வை கோளாரை போக்கும் லென்ஸ் எனும் கண்ணாடியின் காரகர் சுக்கிரன் என்பதும் வெள்ளிக்கிழமையோடு வருவது கமல ஸப்தமி என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சூரியனை ராஜ கிரஹமாக வேதம் போற்றுகிறது. கமல ஸப்தமி விரதம் இருப்பவர்களுக்கு செல்வ செழிப்பு ஏற்படுவதோடு ராஜ வாழ்க்கை கிட்டும் என்பது நம்பிக்கை. 

ஜோதிடத்தில் புத்திர பாவகமும் புத்திர தோஷமும்

"ஸீக்ரமேவ ஸத்புத்ர பாக்ய ப்ராப்தி ரஸ்து" என ஒரு திருமணமான பெண்னை வாழ்த்தும்போது அவள் அளவிடமுடியாத மகிழ்ச்சி அடைவாள். திருமணத்திற்கு பின்பு சில பெண்களுக்கு பத்தாவது மாதத்திலேயே இந்த பாக்கியம் கிடைத்து விடுகிறது. ஒரு சிலருக்கு ஒரு வருடமோ, இரண்டு வருடமோ தள்ளி குழந்தை யோகம் அமைகிறது. இன்னும் சிலருக்கு 8, 10 வருடங்கள் கழித்துதான் குழந்தைபேறு கிடைக்கிறது. சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத நிலையும் ஏற்பட்டு விடுகிறது. 

ஜாதகத்தில் ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் வீடு புத்திர ப்ராப்தியை குறிக்கும் இடமாகும். குழந்தை, பாட்டன். வம்சா வழி அத்துனையும். பாட்டிகள். பூர்வ புண்யம். மனம். எண்ணம். காதல். சந்தோஷம். அதிர்ஷ்டம். யோகம். போட்டி. இஷ்ட தெய்வம். சிற்றின்பம். மந்திர உச்சாடனம். உபாசனை (இஷ்ட தெய்வம்) கற்பழிப்பு. வழிபாடு. திருவிழாக் கோலங்கள். மனதிருப்தி ஆகிய பாவ காரகங்களை தன்னகத்தே கொண்டது ஐந்தாம் பாவமாகும். எனவேதான் இதனை திரிகோண ஸ்தானங்களில் ஒன்றாகவும் லக்ஷமி ஸ்தானம் எனவும் கூறப்படுகிறது

குரு புத்திரகாரகன். ஜாதகத்தில் குரு கெடாமல் இருந்தால், குரு புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்த்தால் அவர்களுக்கு நிச்சயம் குழந்தைப்பேறு இருக்கும். குரு புத்திரஸ்தானத்தில் இருந்தாலும் குழந்தைப் பேறு இருக்கும் என்று சில ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. சில லக்கினக்காரார்களுக்கு குரு பாவியாவதால் அவர் புத்திரஸ்தானத்தில் நிற்பதை நன்மை என்று அப்படியே ஏற்றுக்கொள்ள இயலாது. ஒரு ஜாதகத்தில் குரு 6/8/12. அல்லது பாவராக அமைந்தாலும் அவர் புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் நிற்க கூடாது. அவ்வாறு நின்றால் காரஹோ பாவ நாஸ்தியையும் தந்து மேலும் புத்திர தோஷத்தை அதிகமாக்கிவிடும். 

சிலருக்கு திருமணமான புதிதில் குழந்தை இருந்து பிறகு ஏதோ காரணத்தால் குழந்தையை பிரிந்தவர்களுக்கெல்லாம் இந்த அமைப்பு இருக்கும். மொத்ததில் புத்திரஸ்தானத்தில் அவர் நிற்பதைவிட புத்திர ஸ்தானத்தையோ, புத்திர ஸ்தானாதிபதியையோ பார்ப்பதே சிறந்த நிலையாகும். ஜாதகத்தில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை ஜாதக கட்டம் ஒவ்வொன்றிற்கும் ஒரு ஆதிபத்யம் உள்ளது. அந்த வகையில் ஐந்தாம் இடம், குழந்தை பாக்கியத்தைக் குறிக்கும். அந்த வீட்டின் அதிபதியும் மிக முக்கியம்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தையும், ஒன்பதாம் இடத்தோடு, நான்காம் வீட்டையும் பார்க்க வேண்டும். இந்த 4, 5, 9 ஆகிய வீடுகள் (ராசிகள்) பலம் பெற்றும் அந்த வீட்டிற்குடைய கிரகங்கள் நீச்சம் அடையாமலும் 6, 8, 12ல் மறையாமலும் இருப்பது அவசியமாகும். நீச்ச கிரகத்துடன் சேராமல் இருப்பது மிக முக்கியமாகும்.

ஆண், பெண் இருவரின் ஜாதகங்களில் குரு, செவ்வாய், சுக்கிரனின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும். குருவிற்கு புத்திர பாக்யம் தருவதில் மிக முக்கிய பங்கு உண்டு. ஏனென்றால் குரு புத்திரகாரகன் ஆவார். அதாவது புத்திர யோகத்தை தரக்கூடிய அதிகாரம் பெற்றவர். செவ்வாய் அருளால்தான் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியும்.

பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு காரணமாக இருப்பவர் இவர். பெண்கள் பூப்பெய்துவதற்கும் இவரே முக்கிய காரணம். ரத்த சம்பந்தமான நோய்கள் இவர் மூலம் உண்டாகும். சுக்கிரன், சிற்றின்பத்தில் நாட்டம் கொள்ளச் செய்பவர். திகட்டாத தாம்பத்யத்தையும் ஈர்ப்பு சக்தியையும் தரக்கூடியவர் ஆண்களின் சுக்கிலத்திற்கும் பெண்களின் சுரோணிதத்திற்கும் இவரே காரண கர்த்தா. ஒரு தம்பதியின் ஜாதகங்களில் இந்த மூன்று கிரகங்கள் நல்ல வலிமையுடன் ஆட்சி, உச்சம், கேந்திரம், திரிகோணம் பெற்று நல்ல அம்சத்தில் இருந்தால் விரும்பிய புத்திர யோகம் தானாக கூடிவரும்.

ஜாதகத்தில் 1-5-9க்குடைய கிரஹங்கள் அசுபத்தொடர்பு பெறாமல் இருப்பது மற்றும் கால புருஷனுக்கு 1-5-9 க்குடைய சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரஹங்கள் நல்ல நிலையில் இருப்பது புத்திர பாக்கியத்தை தடையில்லாமல் தரும் அமைப்பாகும். புத்திர பாக்ய தடை ஏற்படுத்தும் அமைப்புகள் ஆண், பெண் இருவரின் ஜாதகங்களிலும் ஏதாவது குறை இருந்தால்தான் குழந்தை பாக்யம் தடைபடும். இருவரில் ஒருவருக்கு பலம் இருந்தால் தடைகள் நீங்க வாய்ப்புண்டு.

லக்னத்திற்கு ஐந்தாம் இடம் புத்திரபாக்யம் தரும் இடம். ஐந்தாம் அதிபதி புத்திர ஸ்தானாதிபதியாவர். இந்த இரண்டும் பலமாக இருப்பது அவசியம். ஐந்தாம் இடத்தில் ராகு-கேது இருந்தால் புத்திரதோஷம். நீச்சக் கிரகம் இருந்தால் புத்திர தடை. 

கால புருஷனுக்கு ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் அசுப கிரகங்கள் இருப்பது, சூரியன் ஸர்ப கிரகங்களின் பிடியில் இருப்பது, சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நிற்பது போன்றவை புத்திரபேறை தாமதப்படுத்தும் அமைப்பாகும்.

ஐந்தாம் வீட்டோடு 6, 8, 12ம் அதிபதிகள் தொடர்பு கொண்டு இருந்தால் கருச்சிதைவு. ஐந்தாம் அதிபதி நீச்சம் அடைந்தால் புத்திர தோஷம். ஐந்தாம் அதிபதி ராகு-கேதுவுடன் சேர்ந்தால் புத்திரத்தடை. ஐந்தாம் அதிபதி நீச்சக் கிரகத்துடன் சேர்ந்தால் புத்திரதோஷம். ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை. ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் காரஹோ பாவ நாஸ்தியை தந்து தாமதமாக குழந்தை பிறக்கும். குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம். ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு. ஐந்தாம் இடத்தை ரிஷபம், கடகம், துலாம் ஆகி சுக்கிரன், சந்திரன் பார்த்தால் பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். 

ஆண் ஜாதகத்தில் விருச்சிக ராசியில் சூரியன், சுக்கிரன் சேர்ந்து இருந்தால் புத்திர தடை. ஐந்தாம் அதிபதியும்-ராகுவும் சேர்ந்து 6, 8, 12ல் இருந்தால் தத்து புத்திரயோகம். ஆண்கள் ஜாதகத்தில் நபும்ஸ கிரகங்கள் என்று சொல்லப்படும் அலித்தன்மையுடைய கிரகங்களான புதனும், சனியும் சேர்ந்து லக்னம், மூன்று, ஏழு ஆகிய இடங்களில் இருந்தாலும், பார்த்தாலும் விந்தணு குறைபாடுகள், வீரியக் குறைவு ஏற்படும். இதனால் குழந்தை பாக்கியதடை ஏற்படலாம். அல்லது அங்கம் குறை உள்ள குழந்தை பிறக்கும்.

ஜாதகத்தில் மிதுனம் மற்றும் கன்னியை ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவமாக பெற்றவர்களுக்கு மலட்டு தன்மையால் குழந்தைபேறு தாமதமாகும்.

குழந்தை பிராப்தம் கிடைக்கும் காலம் எல்லா கிரக அம்சங்கள், யோகம், பிராப்தம் இருந்தாலும் அதை அனுபவிக்கக்கூடிய நேரம், காலம் வரவேண்டும். குழந்தை யோகமும் அப்படித்தான். கணவன், மனைவி இருவருக்கோ அல்லது ஒருவருக்கோ லக்னாதிபதி, நான்காம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோரின் தசாபுக்தி, அந்தரங்களில் குழந்தை பாக்கியம் கூடி வரும். ராகு-கேது திசைகளில் யோகாதிபதிகளின் புக்தியில் சந்ததி விருத்தி ஏற்படும். மற்ற தசாபுக்திகளில் தடைகள், கர்ப்பச்சிதைவு ஏற்பட்டால் உரிய பரிகார தலங்களுக்கு செல்வதன் மூலம் சத்புத்திர யோகம் கிடைக்கும்.
 
சந்தான பாக்கியம் தரும் சந்தான சப்தமி

சூரியனை ஆத்ம காரகன் என்று பாரம்பரிய ஜோதிட நூல்கள் போற்றுகின்றன. மேலும் ஒரு அன்மா உருவாக சூரியனின் நிலை முக்கியமானதாகும். மேலும் ஒருவருடைய சுக்கிலத்தில் உயிரணு வளரவும் பல்கி பெருகவும் சூரினின் வெப்பம் மிகவும் இன்றியமையாததாகும். எனவே எந்த காரணங்களால் புத்திர தோஷம் ஏற்பட்டாலும் சந்தான ஸப்தமியில் சூரியபகவானை வணங்குவது புத்திர தோஷம் நீங்கி சத்புத்திரம் எனப்படும் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நிதர்சனம்!

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com