திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலின் பங்குனி உத்தர திருக்கல்யாண உத்ஸவம் வரும் 30 -ஆம் தேதி நடக்கிறது.
இந்தக் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்குனி உத்திர திருக்கல்யாண உத்ஸவமும் ஒன்று. நிகழாண்டுக்கான உத்ஸவம் வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) தொடங்குகிறது. இதையொட்டி, அன்றைய தினம் நண்பகல் 12 முதல் 1 மணிக்குள் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு திருக்கல்யாண உத்ஸவம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, மாலை 6 மணிக்கு கோயில் தங்கக் கொடிமரம் எதிரே உற்சவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரரும், ஸ்ரீஉண்ணாமுலையம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவமும், இரவு 11 மணிக்கு கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெறுகின்றன.
சுவாமி வீதியுலா: நள்ளிரவு 12 மணிக்கு தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. வரும் 31 -ஆம் தேதி திருவண்ணாமலையை அடுத்த கீழ்நாத்தூர் கிராமத்தில் மருவுண்ணல் மண்டகபடி நிகழ்ச்சி, ஏப்ரல் 1 -ஆம் தேதி திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உத்ஸவம், 2 மற்றும் 3 -ஆம் தேதிகளில் ஊஞ்சல் உத்ஸவம் ஆகியவை நடைபெறுகின்றன.
ஏப்ரல் 4 -ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு தாமரைக் குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சி, குமரக்கோயிலில் மண்டகபடி நிகழ்ச்சி, இரவு 10 மணிக்கு இன்னிசைக் கச்சேரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இத்துடன் இந்தக் கோயிலின் பங்குனி உத்தர திருக்கல்யாண உத்ஸவம் நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகமும், உபயதாரர்களும் செய்து வருகின்றனர்.