தோஷத்தில் பெரிய தோஷம் புத்திர தோஷம். திருமணமான தம்பதியர்களின் ஜாதகத்தில் நிலவும் கடுமையான தோஷம் இது. புத்திர பாக்கியம் இல்லாததால் இன்றும் பல குடும்பங்களில் பெரிய சூறாவளி வீசி வருகின்றது.
என்ன தான் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்தாலும் இந்தத் தோஷம் சிலரை விடாமல் துரத்திக்கொண்டு தான் இருக்கிறது. ஆணோ, பெண்ணோ திருமணத்திற்கு முன்பு அவர்களின் ஜாதகத்தை ஒருமுறைக்கு இரண்டு முறை அலசி ஆராய்ந்து, தோஷம் இருந்தால் அதற்கு முறையான பரிகாரத்தை செய்த பின்பு திருமணம் செய்துகொள்வது நல்லது.
புத்திர தோஷம் உள்ளதை ஜாதகத்தில் எப்படி அறிவது?
5-ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம் உருவாகும். ராகு இருந்தால் புத்திரர் உண்டாவதேயில்லை. அப்படி பிறந்தாலும் 10 அல்லது 15 வயதில் மரணத்தைத் தழுவி புத்திர சோகம் உண்டாகும்.
ஆனால், கேது இருந்தால் தாமதப்பட்டு குழந்தை பிறக்கும். அதாவது குழந்தை உண்டு. ஆனால் திருமணம் ஆகிய 10 அல்லது 15 ஆண்டுகள் கழித்துக்கூட குழந்தை பிறக்க வாய்ப்புண்டு.
பரிகாரம்
இப்படிப்பட்ட புத்திரதோஷ ஜாதகர்கள் ஒன்று ஸ்ரீகாளஹஸ்திக்குச் சென்று சர்ப்ப சாந்தி செய்ய வேண்டும் அல்லது கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் சென்று அங்குள்ள இராகு பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வரவும்.
இங்கு இராகுதோஷம் உள்ளவர்கள் பால் ஊற்றி வழிபட்டால் அது நீல நிறமாக மாறிவிடும். அப்போது தோஷம் கழிந்துவிட்டதாக எடுத்துக்கொள்ளலாம். 5-ல் ராகு இருந்தால் இதைச் செய்ய வேண்டியது அவசியமாகும்.