குமரகோட்டம் முருகன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற குமரகோட்டம் சுப்பிரமணியர் திருக்கோயில் ஏகாம்பரநாதர், காமாட்சியம்மன் கோயிலுக்கு நடுவே அமைந்துள்ளது. கந்த புராணம் அரங்கேறியதும், திருகச்சியப்ப சிவாச்சாரியார், அருணகிரிநாதர், மாதவச் சிவஞான முனிவர், பாம்பன் சுவாமிகள் ஆகியோரால் பாடப் பெற்ற திருத்தலமாக இது விளங்கி வருகிறது.
முருகப்பெருமானின் திரு அவதார நாளாக விசாக நட்சத்திர நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 19 ஆம் தேதி (சனிக்கிழமை) வைகாசி விசாகப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, வரும் 30ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
அதன்படி, பகல் வேளையில் சூரியப் பிரபை, தேவேந்திர மயில்வாகனம், கேடய மங்களகிரி, பல்லக்கு, கண்ணாடி விமானம், மான் வாகனம், விசாக தீர்த்தவாரி, வள்ளித் திருக்கல்யாணம், கந்தப்பொடி வசந்தம் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறவுள்ளன. அதேபோல், இரவு வேளையில் ஆடு வாகனம், அன்ன வாகனம், கேடய மங்களகிரி, யானை வாகனம், சந்திரப் பிரபை, குதிரை வாகனம், மாவடி சேவை, சூரன் மயில் வாகனம் உள்ளிட்ட விசேஷ வாகனங்களில் உற்சவர் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வரும் 25-ஆம் தேதி சுப்பிரமணியரும், 28-ஆம் தேதி சண்முகப் பெருமானும் பவனி வரும் தேர்த் திருவிழா நடைபெறவுள்ளது. வைகாசி விசாக விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், ஊழியர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.