திருவாதிரை திருநட்சத்திரத்தை முன்னிட்டு ராமாநுஜருக்கு வெள்ளிக்கிழமை சதகலச திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ராமாநுஜரை வழிபட்டுச் சென்றனர்.
ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பழமைவாய்ந்த ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யக்கார சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ராமாநுஜர் தானுகந்த திருமேனியாக காட்சியளிக்கிறார். இங்கு ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தையொட்டி ராமாநுஜருக்கு அவதார மண்டபத்தில் திருமஞ்சனத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில், வைகாசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி ராமாநுஜருக்கு சதகலச திருமஞ்சனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 108 கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு திருமஞ்சனம் நடைபெற்றது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ராமாநுஜரை தரிசித்தனர்.
இந்த விழாவையொட்டி, ஏராளமான பக்தர்கள் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்கு வந்தனர். அவர்களுக்கு சிலர் தயிர் சாதம் உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கினர். அவற்றைச் சாப்பிட்ட பக்தர்கள், இலைகளை கோயில் நுழைவு வாயிலில் உள்ள மண்டபத்திலேயே போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஏனெனில், கோயில் வளாகத்தில் குப்பைத்தொட்டி இல்லை. எனவே கோயிலுக்கு வெளியே நிரந்தரமாக குப்பை தொட்டியை அமைக்க கோயில் நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.