திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயிலின் பிரமோத்ஸவ விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இக்கோயில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஸ்தலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் பிரமோத்ஸவம், தேரோட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 6-ம் தேதி ஸ்ரீ விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 சுவாமிகளுக்கென 5 தேர்கள் இடம்பெற்றிருந்தன. காலை 5.30 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து, தொடர்ந்து 26-ம் தேதி ஸ்ரீ சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலாவுக்கு எழுந்தருளுகிறார். 27-ம் தேதி காலை பரிவேட்டை நிகழ்ச்சியும், இரவு தெப்ப உத்ஸவமும் நடைபெறுகிறது.
28-ம் தேதி விசாக தீர்த்த நிகழ்ச்சியாக தங்க ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வாகனங்களில் வீதியுலாவுக்கு புறப்பாடு நடைபெறவுள்ளன. 29-ம் தேதி சண்டிகேசுவரர் உத்ஸவத்துடன் பிரமோத்ஸவம் நிறைவு பெறுகிறது.