திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெற்றது.
வைகாசி விசாகத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வசந்த விழாவாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று வைகாசி விசாகத் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூரில் நேற்று மாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானுக்கு அலகு குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திர திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற உள்ளன.
மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி, முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. மகா தீபாராதனையைத் தொடர்ந்து தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து கோயில் சேர்கிறார்.