பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
பழனி மலைக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்தசஷ்டி விழா முக்கியமான திருவிழாவாகும். நிகழாண்டில் இவ்விழா இன்று காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒருவாரம் நடைபெறுகிறது.
விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. உச்சிக்காலத்தின்போது மூலவர் சன்னதியில் விநாயகர், தண்டாயுதபாணி சுவாமிக்கு காப்புக்கட்டும் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து துவாரபாலகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு காப்புக்கட்டப்பட்டது.
அதையடுத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக்கட்டி விரதத்தைத் தொடங்கினர். வரும் 13-ம் தேதி சூரசம்ஹாரமும், மறுநாள் நவ.14 அன்று காலை 10.30 மணிக்கு மேல் மலைக்கோயிலில் வள்ளி, தேவசேனா சமேத சண்முகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் (பொறுப்பு) செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.