உங்க குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் தவறாமல் போடுகிறீர்களா? நோய் தடுப்பாற்றல் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

உலக நோய்த்தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது
உங்க குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் தவறாமல் போடுகிறீர்களா? நோய் தடுப்பாற்றல் பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

உலக நோய்த்தடுப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 10-ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. தடுப்பு மருந்தால் தடுக்கப்படக்கூடிய நோய்களுக்கு சரியான நேரத்தில் தடுப்பு மருந்து அளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தவே இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்று பல்வேறு நோய்களின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக பல்வேறு நோய்களுக்கும்  நோய் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நோய் வந்த பிறகு சிகிச்சை செய்வதை விட வருமுன் காக்கும் விதமாக தேவையான தடுப்பு மருந்தைச் சரியான காலத்தில் எடுத்துக்கொள்வது  அவசியமாகிறது. 

தடுப்பு மருந்து

ஓர் உயிரியல் தயாரிப்பான தடுப்பு மருந்து ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை வலுப்படுத்துகிறது. நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் போன்றதொரு பொருள் தடுப்பு மருந்தில் உள்ளது. பெரும்பாலும் இப்பொருள் பலவீனமடைந்த அல்லது இறந்த நுண்ணுயிரில் இருந்தும் அல்லது அதற்கெதிரான நச்சில் இருந்தும், அல்லது அதனுடைய ஒரு மேற்பரப்புப் புரதத்தில் இருந்தும்  உருவாக்கப்படும்.

தடுப்பு மருந்தின் அவசியம்

தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்குத் தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதே நோய்த்தடுப்பு எனப்படும். உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையை  நோய்த்தடுப்பு பாதுகாக்கிறது. பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கிறது. உடலின் நோய் தடுப்பாற்றலைத் தடுப்பு மருந்து ஊக்குவித்து ஒருவரை நோயில் இருந்தும் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.  குழந்தைக்குத் தாய்ப்பால் வழியாகச் சிறிது தடுப்பாற்றல் கிடைக்கிறது. தாயிடம் இருந்து குழந்தைக்குக் கிடைக்கும் நோய் எதிர் பொருள் நீடித்து நிற்பதில்லை குழந்தையின் தடுப்பாற்றல் மண்டலம்  உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைகிறது.

எனவே குழந்தையை நோய் தாக்கும் அபாயம் உருவாகும். மேலும் நோய்த்தடுப்பாற்றலை உருவாக்கும் போது உயிருக்கு ஆபத்தான நோய்களிடம் இருந்து அதிகப் பாதுகாப்பு கிடைக்கும். தடுப்பு மருந்து அளிக்கத் தொடங்கியதில் இருந்து உடலில் காப்பு எதிர்வினை உருவாவது வரையுள்ள செயல்முறைகள் நோய்த்தடுப்பு எனப்படும். ஓர் உயிரியல் தயாரிப்பான தடுப்பு மருந்து ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிரான தடுப்பாற்றலை வலுப்படுத்துகிறது. நோயை உண்டாக்கும் நுண்ணுயிர் போன்றதொரு பொருள் தடுப்பு மருந்தில் உள்ளது. பெரும்பாலும் இப்பொருள் பலவீனமடைந்த அல்லது இறந்த நுண்ணுயிரில் இருந்தும் அல்லது அதற்கெதிரான நச்சில் இருந்தும், அல்லது அதனுடைய ஒரு மேற்பரப்புப் புரதத்தில் இருந்தும் உருவாக்கப்படும்.  

தன்தாக்கு நோய்கள்

நம் உடலின் நோய் தடுப்பாற்றல் மண்டலம் என்பது நம்மை பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கும் தற்காப்பு அமைப்பு ஆகும். நம் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளையும், தீங்கு  செய்யும் உயிரணுக்களையும் அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நம்மை இது பாதுகாக்கிறது. ஆனால் நோய் தடுப்பாற்றல் அமைப்பில் குறைபாடுகள் ஏற்படும்போது நோய் எதிர்ப்பு திறன் குறைந்து  அதிகமான தொற்றுநோய்களுக்கு நாம் ஆளாக நேரிடும். நம் உடலின் சொந்த உயிரணுக்களை (செல்களை) இனம்காண முடியாமல் சில நேரங்களில் நோய் தடுப்பாற்றல் மண்டலம் தன் உடலைத் தானே  சேதப்படுத்தவும் கூடும். 

நோய் தடுப்பாற்றல்

தடுப்பு மருந்து அளிப்பதன் மூலம் ஒருவருக்குத் தொற்று நோய்த் தடுப்பை அல்லது எதிர்ப்பை உருவாக்குவதே நோய்த்தடுப்பு எனப்படும். உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஒரு குழந்தையை  நோய்தடுப்பு பாதுகாக்கிறது. பிறருக்கு நோய் பரவுவதையும் குறைக்கிறது. உடலின் நோய் தடுப்பாற்றலைத் தடுப்பு மருந்து ஊக்குவித்து ஒருவரை நோயில் இருந்தும் தொற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.  குழந்தைக்குத் தாய்ப்பால் வழியாக சிறிது தடுப்பாற்றல் கிடைக்கிறது. குழந்தையின் தடுப்பாற்றல் மண்டலம் உருவாகி வரும்போது இந்தத் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறைகிறது. நோய்தடுப்பே  மலிவான ஒரு சுகாதார முதலீடாகும்.

நோய் தடுப்பாற்றல் விழிப்புணர்வு

நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்குக் குணமாக்கும் ஆற்றல் எவ்வளவு தூரம் உள்ளது என்பது குறித்த புரிந்துகொள்ளுதல் மக்களிடம் இன்னும் தெளிவாக இல்லை என்று உலக நலவாழ்வு நிறுவனம்  கூறியுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளின் ஆற்றல் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும், இம்மருந்துகள் பயன்படுத்தப்படும் விதத்தை மாற்றவும், நோய் எதிர்ப்பு சக்தி  மருந்துகள் உலக தடுப்பாற்றல் விழிப்புணர்வு வாரத்தில் முயற்சித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களைக் குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே மருத்துவர்கள்  கொடுக்கிறார்கள். அது மட்டுமல்லாமல், மற்ற நோய்களின் தாக்கத்தைக் குறைப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. மனித உயிர்களைப்  பாதுகாக்கும் தடுப்பு மருந்துகளின் விலை உலகில் அதிகரித்துள்ளதால் சில நாடுகளில் சிறார்க்கு தடுப்பு மருந்துகளை முழுமையாக வழங்க முடியாநிலை ஏற்பட்டுள்ளதாக எல்லைகளற்ற மருத்துவர்கள்  அமைப்பு எச்சரித்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பாற்றலுக்கான ஜோதிட ரீதியான காரணங்கள்

1. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்து நோய் தடுப்பாற்றலுடன் விளங்க அவருக்கு ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் நிறைந்து நிற்க வேண்டும். லக்னாதிபதி லக்னத்திலேயே நிற்பது சிறப்பு. அதிலும் அவர் ஆட்சியாகவோ உச்சமாகவோ நின்றுவிட்டால் மிக்க பலமிக்கவராவார். அவ்வாறு நிற்கும்போது அவருக்கு நோய் தடுப்பாற்றல் இயற்கையாகவே மிகுந்து இருக்கும். லக்னாதிபதியின் வர்க்கோத்தம பலன் ஜாதகரை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

2. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்க லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ கால புருஷ ராசிக்கு 6/8/12 பாவங்களான கன்னி, விருச்சிகம் மற்றும் மீன ராசிகளின் தொடர்பு இருக்கக்  கூடாது. மேற்கண்ட ராசிகள் லக்னமாக இருந்து லக்னாதிபதி ஆட்சி பெற்றிருந்தால் விதிவிலக்கு உண்டு.

3. ஒரு ஜாதகருக்கு அவரது லக்னத்தில் மாந்தி நிற்பது மற்றும் லக்னத்தை மாந்தி பார்ப்பது ஆகியவை ஜாதகருக்கு நோய் தடுப்பாற்றலை குறைத்து அடிக்கடி நோயினால் அவதியுறச் செய்யும்.

4. ஜெனன ஜாதகத்தின் 6/8/12 தொடர்புகள் மற்றும் ராகு கேதுக்களின் தொடர்பும் லக்னத்திற்கு இருப்பது நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

5. மேலும் லக்னம் மற்றும் லக்னாதிபதிக்கு பாதகாதிபதிகள், மாரகாதிபதிகள், திதி சூன்ய ராசியதிபதிகள் தொடர்பும் நோய் தடுப்பாற்றலை குறைக்கும்.

6. லக்னம் மற்றும் லக்னாதிபதிகள் ம்ருத்யு பாகையில் அமைவதும் நோய் தடுப்பாற்றலை குறைத்துவிடும்.

7. ஆத்மகாரகன் எனப்படும் சூரியன் உலகிற்கெல்லாம் அளப்பறிய சக்திகளை வழங்குபவன் ஆவான். சூரியனின் நிலை ராகு கேதுவுடன் இணைந்து கிரகண தோஷம் பெறாமலும், 6/8/12 தொடர்புகள்  பெறாமலும் இருக்க வேண்டும். இந்த நிலை ஜெனன ஜாதக ஆத்ம காரக கிரகத்துக்கும் பொருந்தும்.

8. உடம்பு மற்றும் ரத்தத்தின் காரகன் சந்திரன் ஆகும். இவரே மனதிற்கும் காரகன் ஆவார். தன்னம்பிக்கை பெற்று மனோதிடம் நிறைந்திருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தி பலனளிக்கும். எனவே சந்திரன்  ஜாதகத்தில் நீசமாகாமலும் அசுப தொடர்புகள் பெறாமலும் பாபகர்த்தாரி யோகம் பெறாமலும் நிற்க வேண்டும்.

9. காலபுருஷ ராசியின் லக்னாதிபதி மற்றும் ரத்தத்தின் காரகனான செவ்வாய் பலம் பெற்று இருக்கவேண்டும்.

10. உடல் கட்டமைப்பு மற்றும் எலும்பின் காரகர் சனி பகவான் ஆவார். அவர் நல்ல நிலையில் ஜாதகத்தில் இருக்கவேண்டும்.

11. நோய் தடுப்பாற்றலை தரும் கிரகம் குரு பகவானாவார். குருபகவானின் அருள் பார்வை இருந்தால் மட்டுமே ஓருவருக்கு நோய் தடுப்பாற்றல் பலனளிக்கும்.

12. திரிகோண ஸ்தானங்களில் சுப கிரகங்களும் கேந்திர ஸ்தானங்களில் அசுப கிரகங்கள் ஆட்சி பலத்தோடும் நிற்க வேண்டும்.

13. ஆண்டிபயாடிக் என்பவை ராகு கேதுக்களின் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். எனவே ஆண்டிபயாடிக் உபயோகத்தைக் குறைத்து வருமுன் காக்கும் பழக்க வழக்கத்தைக் கொள்ளவேண்டும். லக்னத்திற்கோ / லக்னாதிபதிக்கோ ராகு/கேதுவின் தொடர்புகள் இருந்தால் அடிக்கடி நோய் ஏற்படும் தன்மையும் ஆண்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் நிலையும் ஏற்படும்.

பாலாரிஷ்ட தோஷங்கள்

பாலரிஷ்டத்தை குறிப்பிடுவதில் சந்திரனின் நிலை முதன்மையானது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. சந்திரனின் பலம்/பலவீனம், சுப அசுப தன்மைகள் ஒரு குழந்தையின் பாலரிஷ்டத்தை தீர்மானிக்கிறது. சந்திரனின் அசுப தன்மைக்கு ஏற்றவாரு குழந்தையில் ஏற்படும் நோய் மற்றும் குழந்தை இறப்பு ஆகியவை அமைந்து விடுகிறது.

சந்திரனை அடுத்து ஒரு குழந்தையின் லக்னத்தின் பலமே குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் ஆயுளை தீர்மானிக்கிறது. லக்னம் மற்றும் லக்னாதிபதி 6/8/12 அதிபதிகளுடன் மற்றும் பாதகாதிபதி, அசுப  கிரஹ தொடர்பு ஏற்படாமல் இருப்பதும் அவர்களின் தசா புத்தி குழந்தை பருவத்தில் ஏற்படாமல் இருப்பதும் அவசியம் ஆகும்.

மாந்தியின் நிலையும் நோய்தடுப்பாற்றலும்

ஜோதிடத்தில் மாந்தி கிரகம் சனியின் உபக்கிரகமாகவும், சனி பகவானின் மைந்தன் என்றும் சொல்லப்படுகிறது. மாந்தி கொடிய பாவ கிரகமாகும். மாந்திஎந்த வீட்டில் இருக்கிறதோ அந்தஸ்தானம் பாதக  ஸ்தானமாகும். அந்தஸ்தான அதிபதியும் பாதகாதிபதி ஆகும். மாந்தி இருக்கும் நட்சத்திரமும் பாதகமாகும். மாந்தி தான் இருக்கும்வீட்டில் இருந்து 2, 7, 12 ம் இடங்களைபார்க்கும். மாந்தியின் பார்வை  பதியும்வீடுகளும் தோஷத்தை உண்டாக்கும். ஒருவருடைய ஜாதகத்தில் குரு பார்வை, சேர்க்கை இல்லாமல் மாந்தி லக்னத்தில் அமர்ந்தால் அவர்களுக்கு நோய் தடுப்பாற்றல் குறைந்து அடிக்கடி  நோய்வாய்ப்பட நேரும்.

ஸ்ர்ப கிரஹங்களின் தாக்கம்

ஜாதகத்தில் லக்னத்தில் ஸர்ப கிரஹங்களான ராகு-கேது நிற்பது, லக்னம்/லக்னாதிபதி/சந்திரன் ஸர்ப கிரஹங்களின் திரிகோண பார்வையைப் பெறுவது ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் அம்சங்களாகும்

நோய் எதிர்பாற்றல் தரும் பரிகாரங்கள்

ஆயுஷ்ய ஹோமம்:

ஒரு குழந்தைக்கு பிறந்த முதல் வருட ஜென்ம நக்‌ஷத்திரம் முதல் ஒவ்வொரு வருடமும் ஜென்ம நக்‌ஷத்திர நாளில் 'ஆயுஷ்ய சூக்தம்” என்னும் மந்திரத்தைக் கொண்டு ஆயிரத்தெட்டு தடவை நல்ல நெய்யைக் கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காகச் செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர்  பெற்றது. ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டிச் செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம்  செய்து நக்ஷத்திர ஸுக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களைச் செபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு ஸ்நானம் செய்வித்து தீர்த்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வாறு  செய்வது வேத முறையிலான நோய் தடுப்பாற்றலை ஏற்படுத்தும் முறையாகும்.

1. நோய் எதிர்ப்பாற்றல் பெறக் குல தெய்வ வழிபாடு முக்கியமானதாகும். அவ்வப்போது அவரவர் குல தெய்வங்களைச் சென்று வழிபட்டுவருவது சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும்.

2. பித்ரு வழிபாடு எனும் முன்னோருக்குச் செய்யும் திதிகளை சரிவர செய்யவேண்டும்.

3. நவக்கிரங்களில் நோய் தடுப்பாற்றலுக்கு அனைத்துக் கிரகங்களையும் வழிபடவேண்டும் என்றாலும் குரு, சூரியன் சந்திரன் இவர்களை வழிபடுவது சிறந்த பலனளிக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை தரும்.

4. தேவ மருத்துவரான தன்வந்திரி வழிபாடு மிகச்சிறந்த நோய் எதிர்ப்பாற்றலை ஏற்படுத்தும். புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தன்வந்திரி வழிபாடு செய்வது சிறப்பாகும்.

5. லக்னத்தில் மாந்தி நிற்கப்பெற்றவர்கள் கும்பகோணத்திற்கு அருகில் நாச்சியார் கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள குடும்ப சனி கோயிலில் மாந்திக்கும் சனிக்கிழமை அல்லது  அஷ்டமி திதி நாளில் அபிஷேக ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு செய்வது, சென்னை அரக்கோணம் மார்க்கத்தில் திருவாலங்காட்டில் உள்ள சிவன் கோயிலில் உள்ள மாந்திக்கு வழிபாடு செய்வது  ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியினை ஏற்படுத்தி நோய்களிலிருந்து காக்கும்.

6. தற்போது ஸ்கந்த சஷ்டியின் மூன்றாம் நாள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ”கந்தன் திருநீரனிந்தால் வந்த வினை ஓடிவிடும்” எனும் பாடலுக்கு இணங்கவும் “காக்க காக்க கனகவேல் காக்க”  எனும் வரிகளுக்கேற்பவும் கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் ஆகிய ஸ்தோத்திரங்களை ஒருவர் தொடர்ந்து ஜெபித்து திருநீரனிந்து வர, ரத்தத்தின் காரகர் மற்றும் காலபுருஷ லக்னாதிபதி பலமடைந்து  நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.

7. தசமூலாரிஷ்டம், ச்யவன ப்ராஸ லேகியம், திராஷாதி லேகியம், திரிபால சூரணம் போன்ற ஆயுர்வேத மருந்துகளைத் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் சாப்பிட்டுவர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8. முக்கியமாகக் குழந்தை பருவத்தில் நோய் தடுப்பு மருந்துகளைத் தவறாமல் அளித்து வர வேண்டும்.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com