திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சிட்டரம்பாக்கம் கிராமத்தில் உள்ள பச்சையம்மன் உடனுறை முனீஸ்வரர் கோயிலில் மூன்று நிலை ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிட்டரம்பாக்கம் முனீஸ்வரர் கோயிலில் நிகழ்வை ஒட்டி சனிக்கிழமை அனுக்ஞை, விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து ஹோமம், ரக்ஹா பந்தனம், கலாகர்ஷணம், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜை, கோபுர கலச பிரதிஷ்டை ஆகியவை நடைபெற்றன.
தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நாடி சந்தனம், பால், தயிர், மோர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவிய ஹோமம், மஹாபூர்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், கலச புறப்பாடு போன்றவை நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து, புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுரத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதையடுத்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேகத்தில் சிட்டரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்த கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை டி.ஆர்.வேலுமணி, லட்சுமி, கோவில் தர்மகர்த்தாக்கள் ஆர்.எஸ்.நந்தகோபால், வி.முருகைய்யன் மற்றும் கிராம பொதுமக்கள் முன்னின்று சிறப்பாக நடத்தினர்.