ஏழுமலையானை இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் சிவன் வழிபட்டார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ஜிஎஸ்எல்வி மார்க்-3, டி-2 ராக்கெட் புதன்கிழமை (நவ. 14) காலை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதன் மாதிரி வடிவத்தை ஏழுமலையானின் திருவடியில் வைத்து பூஜை செய்வதற்காக இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதிக்கு வந்தார். அவர் செவ்வாய்க்கிழமை காலையில் ஏழுமலையானை தரிசித்தார். பூஜை செய்து, தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்புப் பிரசாதங்களை வழங்கினர். பிரசாதங்களை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஜிஎஸ்எல்வி மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் செயற்கைக் கோள்கள் ஜம்மு-காஷ்மீர் மற்றும் நாட்டின் வடகிழக்குப் பகுதிகளில் தொலைதொடர்பை சீராக்கும் நோக்கில் புதன்கிழமை விண்ணில் ஏவப்பட உள்ளன. தற்போது கஜா புயல் காரணமாக வானிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வானிலை சாதகமாக இருந்தால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும். வானிலை சாதகமாக இல்லையென்றால் ராக்கெட் ஏவப்படுவது ரத்து செய்யப்படும் என்றார் அவர்.
காளஹஸ்தியில் வழிபாடு: அதன் பின் காளஹஸ்தி சென்ற அவர் காளஹஸ்தீஸ்வரரை தரிசித்துவிட்டு, ஸ்ரீஹரிகோட்டா திரும்பினார்.