திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 20) காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் திருவிழாவின் 7-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஉண்ணாமுலையம்மன், ஸ்ரீஅருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
ஸ்ரீவிநாயகர் தேரோட்டம்: தொடர்ந்து, காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் ஸ்ரீவிநாயகர் தேரோட்டம் தொடங்குகிறது.
தேரடி தெருவைக் கடந்து கடலைக்கடை சந்திப்புப் பகுதியை விநாயகர் தேர் கடந்து சென்ற பிறகு, 2-ஆவதாக வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான் தேர் புறப்படுகிறது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர்: 3-ஆவதாக பெரிய தேர் எனப்படும் ஸ்ரீஅருணாசலேஸ்வரர் தேர் புறப்படுகிறது. 4-ஆவதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீபராசக்தியம்மன் தேரும், 5-ஆவதாக சிறுவர்கள் மட்டுமே இழுக்கும் ஸ்ரீசண்டிகேஸ்வரர் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படுகின்றன.
பஞ்ச ரதங்களும் ஒன்றன் பின் ஒன்றாக மாட வீதிகளை வலம் வருகின்றன. நள்ளிரவு 12 மணி வரை தேரடி தெரு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு உள்ளிட்ட மாட வீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தைக் காண பல லட்சம் பக்தர்கள் கூடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வழக்கத்தைவிட அதிகமான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஞானசேகர் மற்றும் உபயதாரர்கள், கோயில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.