கார்த்திகை மாதத்தின் முதல் சோமவாரத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை குற்றாலத்தில் திரளான பெண்கள் பேரருவியில் நீராடி வழிபாடு நடத்தினர்.
சோமவாரத்தில் கணவருக்கு நீண்ட ஆயுளை வழங்க வேண்டிபெண்கள் இறை வழிபாடு நடத்துவது வழக்கம். இதையொட்டி, குற்றாலத்தில் அதிகாலை முதல் பெண்களின் வருகை அதிக அளவில் இருந்தது.
இதையடுத்து, ஆண்கள் குளிக்கும் பகுதியில் பெண்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதல் காலை 9 மணி வரை பேரருவியில் ஆண்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை.
பேரருவியில் நீராடிய பெண்கள் அருகேயிருந்த செண்பகவிநாயகர் மற்றும் கன்னிவிநாயகர் கோயில்களில் மாங்கல்ய பூஜை நடத்தினர். செண்பகவிநாயகர் சன்னதியில் பிரகாரத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பழம், மஞ்சள் வைத்து வழிபட்டனர்.