கார்த்திகை மாத பௌர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீ உண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த மாதம் கார்த்திகை பௌர்ணமி மட்டுமல்லாது கார்த்திகை தீபத்திருவிழாவும் சிறப்பு வாய்ந்தது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பௌர்ணமியில் கிரிவலத்தை மேற்கொள்வது எண்ணிலடங்கா பலன்களை தரக்கூடியது.
இந்நிலையில், கார்த்திகை மாதத்துக்கான பௌர்ணமியையொட்டி, வியாழக்கிழமை (நவம்பர் 22) காலை 10.12 மணி முதல் வெள்ளிக்கிழமை (நவம்பர் 23) இரவு 11.12 மணி வரை கிரிவலம் வரலாம் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, அடுத்த இரண்டு நாட்களுக்கு அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.