சிவபெருமானின் திருக்கோல வடிவங்களில் பைரவர் திருக்கோல வடிவமும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி திதியானது பைரவருக்கு மிகவும் உகந்த நாளாகும். ஒவ்வொரு அஷ்டமி திதிக்கும் ஒரு தனியான பெயர் உண்டு. அதன்படி கார்த்திகை மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமிக்கு கால பைரவாஷ்டமி என்று பெயர்.
கால பைரவர் என்ற உடனேயே எல்லோருக்கும் முதலில் காசிதான் நினைவிற்கு வருகிறது இல்லையா? காசி என்னும் புண்ணிய நகரத்தைக் காக்கும் காவல் தெய்வம் காலபைரவர். காசியில், காலபைரவருக்கு வழிபாடுகள் முடிந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு வழிபாடுகள் நடைபெறும் காசியாத்திரை செல்பவர்கள் கூட இறுதியில் காலபைரவரை தரிசித்தால்தான் காசி யாத்திரை பூரணம் அடைவதோடு யாத்திரையின் பலமும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
காலபைரவரின் திரு உருவத்தில் பன்னிரண்டு ராசிகளும் அடங்கி உள்ளன. சிரசில் மேஷ ராசியும், திருவாய் பகுதியில் ரிஷப ராசியும், ஹஸ்தங்களில் மிதுன ராசியும், திரு மார்பினில் கடக்க ராசியும், உந்திப் பகுதியில் சிம்ம ராசியும், இடையினில் சிம்ம ராசியும், புட்டப் பகுதியில் துலா ராசியும், லிங்கப் பகுதியில் மகர ராசியும், தொடைப் பகுதியில் தனுசு ராசியும், முழந்தாள்களில் மகர ராசியும், காலின் கீழ் பகுதிகளில் கும்ப ராசியும், காலின் அடிப்பகுதிகளில் மீனா ராசியும் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
சந்திரனை சிரசில் தரித்து சூலம், மழு, பாசம், தண்டம் ஆகியவற்றினைக் கைகளில் ஏந்தியபடி அருள் பாலிக்கும் இவருக்கு 'அமர்தகர்', 'பாபபட்சணர்' என்று வேறு இரண்டு திருநாமங்களும் உண்டு.
ஞாயிறு அன்று ராகு கால வேளையில், எலுமிச்சம் பழ மாலை சாற்றி விபூதியால் அபிஷேகம் செய்து பின்பு வடைமாலை சாற்றி எள் கலந்த அன்னம் இனிப்புப் பண்டங்கள் சமர்ப்பித்து வழிபட வேண்டும். திங்கள் அன்று ராகு கால வேளையில் அல்லி மலர் புனுகு சாற்றி பாகற்காய் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். செவ்வாய் அன்று ராகு கால வேளையில் செவ்வரளி மாலை சாற்றி .துவரம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். புதன் கிழமை ராகு கால வேளையில், மருக்கொழுந்து மாலை சாற்றி பயிற்றம் பருப்பு கலந்த அன்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.
வியாழக்கிழமை ராகு கால வேளையில் மஞ்சள் நிறமுடைய மலர்களை மாலையாகச் சாற்றி பால் பாயசம், சுண்டல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமையன்று ராகு கால வேளையில் தாமரை மலர்கள் சாற்றி, கேசரி பானகம் சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். சனிக்கிழமை ராகு கால வேளையில் நாகலிங்கப்பூ சமர்ப்பித்து, பால் பாயசம், எள் கலந்த அன்னம், கருப்பு திராட்சை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.
சனி பகவானுக்கு குருவே பைரவர் தான் என்பதால், பைரவரை வழிபடுபவர்களுக்கு சனி பகவானால் எந்தவித இடைஞ்சலும் நேராது. சிவபெருமானின் திருக்கோயில்களில் வடகிழக்கு திசையினில் பைரவருக்குத் தனி சன்னதி இருக்கும். ஆலயங்களில் இருக்கும் பைரவரை எந்த நேரத்தில் வழிபட்டாலும் அதற்குண்டான பலன் நிச்சயம் உண்டு.
கால பைரவரை வழிபடுவோம் சகலவிதமான கவலைகளில் இருந்து விடுபடுவோம். பைரவ காயத்திரியைக் கூறுவதால் வாழ்வில் சகல துன்பங்களும் விலகிப் போகும்.
பைரவ காயத்திரி மந்திரம்.
ஓம் ஷ்வாநத் வஜாய வித்மஹே
சூழ ஹஸ்தாய தீமஹி
தந்நோ பைரவ ப்ரசோதயாத் .
- மாலதி சந்திரசேகரன்
.