ஜோதிடர் சோ.சந்திரசேகரன் கணித்த குருப் பெயர்ச்சி பலன்கள் 2018

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன்
ஜோதிடர் சோ.சந்திரசேகரன் கணித்த குருப் பெயர்ச்சி பலன்கள் 2018

2018-ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி பலன்களைத் தினமணி ஜோதிடர் சோ.சந்திரசேகரன் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். 

நவக்கிரகங்கள் எதுவுமே நிலையாக ஒரே இடத்தில் இருப்பதில்லை. தன்பாதையில் சூரியனை வலம் வந்து கொண்டே இருக்கின்றன. சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமான குருவானவர் சூரியனைஒரு தடவை சுற்றிவர சுமார் 12 ஆண்டுகளுக்கும் குறைவாகவே எடுத்துக் கொள்கிறார். குருவும் பூமியைப்போல் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறார். இது தன்னைத்தானே சுற்றிக்கொள்ள சுமார் 10 மணி நேரத்திற்கும் குறைவாகவே ஆகிறது. பூமியைப்போல் குருவிற்கும் துணைக்கோள்கள் உண்டு. 

குருவானவர் ஓர் நல்ஆசிரியர். எல்லோருக்கும் நல்வழி காட்டுபவரே அவர்தான். குருவானவர் தேவ குரு, சுக்கிரன் அசுரகுருவாகும்.  பொதுவாக இருவருமே எதிரிகள் என்று கூறுவார்கள். ஆனால் இந்தக் கூற்றில் உண்மை இல்லை. ஒருவர் ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் நல்லவைகள்தான் நடக்கின்றனவே தவிர கெடுதல்கள் எதுவும் நடப்பதில்லை. ஆகவே அவர்களின் சேர்க்கை எதிர்மறையான பலனைக் கொடுக்குமென்று கூறிவிட முடியாது. குருவினுடைய வீட்டிலேதான் அதாவது மீனத்திலேதான் சுக்கிரன் உச்சமடைகிறார். சரி! இனி நாம் குருப் பெயர்ச்சிப் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்.

குருவானவர் திருக்கணிதரீதியாக 11-10-2018 அன்று இரவு சுமார் 7.20 மணிக்கு துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கும், வாக்கியரீதியாக 04-10-2018 அன்று உதயாதி நாழிகை 40.00க்கும் விருச்சிக ராசிக்குப்பெயர்கிறார். இனி ஒவ்வொரு ராசிக்கும் குருப் பெயர்ச்சிப் பலன்களைப் பார்ப்போம். கீழே கொடுத்துள்ள பலன்களில் குரு விருச்சிகத்தில் தங்கி இருக்கும் காலமான ஓராண்டுக்கான பனலனைக் கொடுத்துள்ளோம். ஆண்டு என்பது குரு தங்கி இருக்கும் ஓராண்டைக் குறிக்கும்.

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை முதல் பாதம்)

மேஷ ராசிக்காரர்களுக்கு குருவானவர் 7-ம் இடமான துலாத்திலிருந்து விருச்சிகம் வருகிறார். அதாவது ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சாரம் செய்கின்றார். உடனே 8-ம் இடம் மறைவு ஸ்தானம். ஆகவே இந்த ஆண்டு முழுவதும் குரு பலமற்று இருக்கிறார். நல்ல பலன்களைச் செய்ய இயலாதவராக இருக்கிறார் என்று எண்ண வேண்டாம். 8-ம் இடம் என்பது களத்திர ஸ்தானமான 7-ம் இடத்திற்கு 2-ம் இடம், அதாவது களத்திரத்தின் தனஸ்தானம். ஆகவே இந்த ராசிக்காரரின் கணவர் அல்லது மனைவிக்குப் பொருளாதார வசதி பெருகும். 

அவர்கள் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால் அந்தப் பதவி உயர்வு கிட்டும். அதன் மூலம் அவர்கள் பொருளாதார வசதி பெறுவர். இந்த ராசிக்காரர்களின் 12-ம் இடமான விரயஸ்தானத்திற்கும் குருவின்பார்வை கிடைக்கிறது. ஆக உங்கள் செலவுகள் கட்டுக்கடங்கி இருக்கும். இரண்டு மற்றும் நான்காம் வீட்டிற்கும் குருவின் பார்வை கிட்டுவதால் உங்கள் பண வரவு நன்றாக இருக்கும். 4-ம் இடமானகடகத்திற்கு ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் செவ்வாயின் பார்வைவேறு கிடைக்கிறது. 

ஆகவே இந்த ராசிக்காரர்கள், வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்க விழைந்தால் இந்த மாதங்களில் முயற்சித்தால் அதில் வெற்றி பெறுவார்கள். குருவானவர் ஐப்பசி 9-ம் தேதி முடிய விசாக 4-ம் பாதத்தில் சஞ்சாரம் செய்கின்றார். அப்போது சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் செய்யும்படியாக இருக்கும். ஐப்பசி 10 முதல் மார்கழி 11 முடிய குருவானவர் அனுஷம் நட்சத்திரத்தில் சஞ்சாரம்செய்கின்றார். அப்போது சிலருக்குத் தொழில் சம்மந்தமாக வெளியூர்ப்பயணம் மேற்கொள்ள நேரிடும். 

உத்தியோகத்தில் முன்னேற்றமும் காணப்படும். இந்த ஓராண்டு முழுவதும் இளைய சகோதரத்துடனான உறவு சுமூகமாக இருக்காது. நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் அவர்கள் இருக்க மாட்டார்கள்.  ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் இந்த ராசிக்காரர்கள் சிறிது எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். உடலில் காயங்கள் ஏற்படக் கூடிய கிரக நிலைகள் காணப்படுவதால் சிறிது முன் எச்சரிக்கையுடனே இருங்கள்.  

வியாபாரத்திலிருப்போருக்கு: பொதுவாக இந்த ஆண்டு நல்ல விதமாகவே காணப்படுகிறது. சித்திரை, ஆவணி மாதங்களில் வியாபாரத்தில் மந்த நிலையும், சுணக்கமும் காணப்படும். பங்குனி, ஆனி, புரட்டாசி மாதங்களில் நல்ல வியாபாரத்தை எதிர்பார்க்கலாம்.  

உத்தியோகத்திலிருப்போருக்கு: பொதுவாகவே இந்த ஆண்டு முழுவதும் உத்தியோகத்திலிருப்போருக்கு பிரச்னைகள் உள்ள காலமாகவே காணப்படுகிறது. 6-ம் இடமான உத்தியோகஸ்தானத்திற்கு 9-ம் வீட்டிலிருந்து சனிபகவான் பார்வை இருப்பதால் உத்தியோகத்தில் மதிப்பின்மை, பதவி உயர்வில் காலதாமதம் ஆகியவை காணப்படுகின்றன.  

கலைஞர்களுக்கு: கலைக்கு அதிபதியான சுக்கிரன் நிலையை வைத்துப் பார்க்கும்போது ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்கள் மிக அனுகூலமாக இருக்கின்றன.  

பரிகாரம்: ராசிக்கு அதிபதி செவ்வாயாக இருப்பதால் அனுதினமும், குறிப்பாக செவ்வாய்க் கிழமைகளில் கந்த சஷ்டி கவசம் சொல்லி வரவும்.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2,3,4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்)

ராசியதிபதி சுக்கிரன் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதம் 17-ம் தேதி வரை 6-ம் வீடான துலாத்தில் சஞ்சாரம் செய்கிறார். இதன் காரணமாக உடல்நிலையில் பாதிப்புக்கள் உண்டாகும். ஆகவே மருத்துவரின் உதவியை நாடி உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வது நல்லது. பங்குனி, சித்திரை மாதங்களில் இந்த ஜாதகருக்கு பொருளாதார நிலை நன்றாக இருப்பதோடு, சுற்றம், மற்றும் நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். 

பொதுவாகவே இந்த ஆண்டு முழுவதும் நீங்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். அனாவசியச் செலவைக் குறைப்பதில் கண்ணாயிருப்பீர்கள். குழந்தைப்பேற்றை எதிர்பார்ப்போருக்கு அது தாமதமாவதாகவே தெரிகிறது. குடும்பஸ்தானமான 2-ம் இடத்திற்கும், புத்திர ஸ்தானமான 5-ம் இடத்திற்கும் சனியின் பார்வை இருப்பதால் புத்திர பாக்கியம் தாமதமாகிறது. ஆகவே சனிபகவானுக்கு தக்க பரிகாரம் செய்துகொள்வது நல்லது.

அதேபோல் உத்தியோகம் தேடும் வேட்டையில் இருப்போருக்கும் பதவி உயர்வை எதிர்பார்ப்போருக்கும் அதில் தாமதமே ஏற்படும். இந்த தாமதத்தைத் தடுக்க சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் விளக்கு ஏற்றிவரவும். காகத்திற்கு எள் சாதம் இடவும்.

சொந்த வீடு, மனை வாங்க எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் நேரம் எல்லோருக்கும் கனிந்து வருவதில்லை. இந்த ராசிக்காரர்களுக்கு ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, சித்திரை, ஆவணி, புரட்டாசி மாதங்கள் வீடு வாங்கவோ, அல்லது மனை வாங்கவோ அனுகூலமான மாதங்கள். அப்போது முயற்சித்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

குடும்பஸ்தானத்திற்கு இந்த ஆண்டு முழுவதும் சனியின் பார்வை இருப்பதால் அமைதி சற்று குறைவாகவே காணப்படும். இளைய சகோதரத்துடனான உறவைப் பார்க்கும்போது மாசி, பங்குனி, ஆடி மாதங்கள் அந்த உறவில் சுமுகமான நிலை காணப்படவில்லை. மாறாக பிரச்னைகளே காணப்படுகிறது. இந்த ராசிக்கு 7-ல் குரு இருப்பதால் இந்த ஆண்டில் திருமணம் ஆகாதோருக்குத் திருமணம் ஆக கிரகங்களின் நிலை அனுகூலமாக இருக்கிறது. முயற்சி செய்யுங்கள். முயற்சி திருவினையாக்கும். 

அதேபோல் இப்போதெல்லாம் வாகனம் வாங்க எல்லோருக்கும் ஆசை இருக்கிறது. அப்படியானால் இந்த ராசிக்காரர் எப்போது வாகனம் வாங்குவர்? ஐப்பசி, பங்குனி, ஆடி, ஆவணி மாதங்கள் மிக அனுகூலமாக இருப்பதால் அப்போது முயற்சி செய்யவும். உங்கள் முயற்சி பலிதமாகும். 

வியாபாரத்திலிருப்போருக்கு: ஜாதகத்தில் 7-ம் இடம் என்பது வியாபாரத்தைக் குறிக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் அதில் லாபாதிபதியான குரு இருக்கிறார். ஆக வியாபாரம் குறைவில்லாமல் இருக்கும்.  அதே சமயத்தில் குரு 8-ம் வீட்டிற்கும் அதிபதியாகின்றார். ஆக சில மாதங்களில் வியாபாரத்தில் தொய்வு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. ஆக வியாபாரிகள் எச்சரிக்கையுடன் தம் தொழிலைச் செய்வது நல்லது. 

உத்தியோகத்திலிருப்போருக்கு: நாம் ஏற்கனவே எழுதியதுபோல் இந்த ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் தேக்க நிலையும், மேலதிகாரிகளின் ஆதரவின்மையும் காணப்படும். ஏனெனில் உத்தியோகஸ்தானமான 6-ம் இடத்திற்கும், ஜீவனஸ்தானமான 10-ம் இடத்திற்கும் சனியின் பார்வை இருப்பதால் இத்தகைய நிலை நீடிக்கும். 

கலைஞர்களுக்கு: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, சித்திரை, ஆடி  ஆகிய மாதங்கள் கலைஞர்களுக்கு ஆதரவாகத் தெரிகிறது.  

பரிகாரம்: பிரதி சனிதோறும் சனிபகவானை வணங்கிவந்தால் தடைகள் ஓரளவு நீங்கும்.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம்1,2,3 பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு சனியின் நேர் பார்வை. ஆக இந்த ஓராண்டு முழுவதும் எடுத்த காரியங்களை முடிக்கத் தடை, தாமதம் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கும் வேகத்திற்குக் காரியங்கள் நடக்காது. அதேபோல்  9-ம் இடமான தகப்பனார் ஸ்தானத்திற்கும் சனியின் பார்வை இந்த ஆண்டு முழுவதும் இருக்கிறது. ஆக தகப்பனாருடனான உறவு அவ்வளவு திருப்திகரமாக இருக்காது. கார்த்திகை, மார்கழி மாதங்களில்  மனக்கசப்பு சற்று அதிகமாகவே இருந்து வரும். உயர் கல்வி சேர விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய துறையில் கிடைப்பது கடினம்.  

உயர் கல்வி மட்டுமல்லாது கல்லூரியில் சேர விழையும் மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பிய துறையில் கிடைப்பதற்குக் கால தாமதம் ஆகும். அடுத்து குடும்ப வாழ்க்கையைப் பார்க்கும்போது 2-ம்  இடமான குடும்ப ஸ்தானத்தில் ராகு ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களில் செவ்வாயின் பார்வையும் 2-ம் இடத்திற்குக் கிடைக்கிறது. ஆகவே அந்த மாதங்களில் குடும்பத்தில், சச்சரவு, மனஸ்தாபங்கள்  ஆகியவை இருக்கும். இந்த குருப் பெயர்ச்சியின் மூலம் குருவின் பார்வை 6-ம் வீட்டிலிருந்து தன ஸ்தானத்திற்குக் கிடைப்பதால் உத்தியோக வேட்டையிலிருப்போருக்கு வேலை கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம்.  

திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணக் காலம் எப்பொழுது வருகிறது எனப்பார்க்க வேண்டுமல்லவா? பொதுவாக 7-ல் சனி இருந்தாலே தாமதமான திருமணம்தான். மாசி மாதம் 22-ம் தேதிக்குப் பிறகு  கேது வேறு 7-ம் வீட்டிற்கு வருகிறார். ஆகத் திருமணத்திற்கு இருக்கும் ஆண், பெண் தக்க பரிகாரம் செய்துகொள்ள வேண்டியது அவசியம். அவர்கள் ஜாதகத்தில் தசா புக்திகள் மிக வலுவாக  இருந்தால்தான் திருமணம் இந்த ஆண்டு சாத்தியம்.  

மார்கழி, தை மாதங்களில் உத்தியோக சம்பந்தமான பணி இடமாறுதல் இருக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணமும் இருக்கும். இளைய சகோதரத்துடனான உறவில் கார்த்திகை, மார்கழி, சித்திரை ஆகிய  மாதங்களில் சுமுகமான நிலை காணப்படவில்லை. அதே சமயத்தில் பங்குனி, சித்திரை, புரட்டாசி மாதங்களில் அவர்கள் மூலம் அனுகூலமும் காணப்படுகிறது.  

வீடு, வாசல் வாங்க விழைவோருக்கு வைகாசி, ஆனி மாதங்கள் அனுகூலமாகத் தெரிகின்றன. மகப்பேற்றை எதிர்நோக்கியிருக்கும் பெண்களுக்கு மார்கழி, தை மாதங்களில் மகப்பேறு இருக்குமேயாகில்  அப்போது அறுவை சிகிச்சை உதவியை நாட வேண்டியது இருக்கும். மற்ற மாதங்களில் மகப்பேற்றை எதிர்நோக்கி இருக்கும் பெண்கள் மருத்துவ உதவியுடன் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த ராசிக்கு 7-ம் வீட்டு அதிபதியாகிய குரு 6-ம் வீட்டில் இருப்பதால் கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகளுக்கு நிறைய இடமுண்டு. ஆகவே இருவரும் சற்று விட்டுக் கொடுத்துச் செல்வது அவர்களுக்கு நல்லது.
 
வியாபாரிகளுக்கு:
7-ல் சனி இருப்பது பொதுவாக வியாபாரத்திற்கு நல்லது அல்ல. அதற்காக வியாபாரத்தை நிறுத்திவிட முடியாது. சற்று எச்சரிக்கையுடன் செய்வது நல்லது.

உத்தியோகத்திலிருப்போருக்கு: 10-ம் வீட்டிற்கு உடைய குரு 6-ல் இருப்பதால் பதவி உயர்வை எதிர்பார்ப்போருக்குப் பதவி உயர்வு கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதேபோல் வேலை வேட்டையில் இருப்போருக்கு வேலைக் கிடைக்கும். பொதுவாக, உத்தியோகஸ்தர்களுக்கு ஆதரவான குருப் பெயர்ச்சி இது.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் பூசம், ஆயில்யம்)

ராசிக்கு 5-ல் இருக்கும் குரு 9-ம் இடத்தையும், 11-ம் இடத்தையும், ஜென்ம ராசியையும் பார்க்கிறார். குரு பார்க்கக் கோடிப் புண்ணியமன்றோ! ஜென்மராசியைப் பார்ப்பதால் உங்களுக்குத் தெய்வ அனுக்கிரகம் இருக்கிறது. ஆகவே பல காரியங்கள் உங்களுக்கு அனுகூலமாகவே நடந்துவரும். 

உங்கள் உடல் நிலை நல்லவிதமாகவே இருந்து வரும். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியானது உடல் முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதிக பாதிப்பிலிருந்து காப்பாற்றும். 9-ம் இடமான தன் சொந்த வீட்டையே பார்ப்பதால் தகப்பனாருடனான உறவு மேம்படும். சிலருக்குத் தகப்பனாரிடமிருந்து உதவிகள் கிட்டும். சிலருக்கு ரேஸ் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். வயதானவர்களுக்கு தங்கள் பெண், பிள்ளைகளிடமிருந்து உடல் உதவியோ அல்லது பண உதவியோ கிடைக்கும்.  

குடும்ப வாழ்க்கையைப் பொருத்தமட்டில் ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் சுமுகமாக இருக்காது. அடிக்கடி சிறு, சிறு மனஸ்தாபங்கள் ஊடல்களுக்கு இடமுண்டு. மற்ற மாதங்களில் குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருக்கும். பொருளாதாரம் பொதுவாக நன்றாக இருந்தாலும் பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் மிகச் சரளமான பொருளாதார நிலை இருக்கும்.  

ஸ்திர சொத்துக்கள், வாகனம் வாங்க விழைவோருக்கு இந்த ஆண்டு மிக அனுகூலமாக இருக்கிறது. சிலருக்கு இருக்கும் பழைய வீட்டை விற்க வேண்டுமென்று முயற்சி செய்வார்கள். அவர்களுக்கு அதற்கு அனுகூலமான நேரம் வராமல் இருக்கும். இந்த ஆண்டு பங்குனி, சித்திரை மாதங்கள் அதற்கு அனுகூலமாக இருக்கின்றன.  

திருமணத் தேடல்களில் இருப்பவர்களுக்கு இந்த வருடம் சற்றுப் பின்னடைவாகவே காணப்படுகிறது. 7-ம் வீட்டிற்குடைய சனி 6-ம் வீட்டில் இருப்பதால் பல தடங்கல்களுக்குப் பிறகு திருமணம் நிச்சயமாகும். 

வியாபாரத்திலிருப்போருக்கு: வியாபாரம் நல்லபடியாகவே இருக்கும். இவர்களுடன் போட்டியிடும் மற்றவர்களைவிட இவர்கள் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். 

உத்தியோகத்திலிருப்போருக்கு: 6-ம் வீட்டில் சனி இருப்பதால் உத்தியோகத்தில் வேலைப்பளு சற்று அதிகம் இருக்கும். உங்கள் திறமைகளுக்கு மேலதிகாரிகள் அவ்வளவாக மதிப்புக் கொடுக்க மாட்டார்கள். உத்தியோக உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கும் அவர்கள் ஆசை நிறைவேற சற்றுத் தாமதம் ஆகும். வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கும் இதே நிலைதான். 

மாணவர்களுக்கு: இது ஒரு அனுகூலமான காலமாகவே தெரிகிறது. மேல்படிப்படிப்புத் தொடர இருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பிய பாடப்பிரிவே கிடைக்கும்.  

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 4-ல் குரு சஞ்சாரம் செய்கிறார். இதனால் அவர் பார்வை 8,10,12-ம் வீடுகளுக்குக் கிடைக்கிறது. 8-ம் இடம் என்பது பிதுரார்ஜித சொத்துக்கள், ஒருவருக்குக் கிடைக்க வேண்டிய பி.எஃப்., கிராஜுவட்டி போன்றவற்றைக் குறிக்கும்.

ஆக இந்த இடத்துக்குக் குருபார்வை கிடைப்பதால் தாமதமாகின்ற இத்தகைய வரவுகள் அவர்களுக்கு இந்த ஆண்டு கிடைக்கும். 10-ம் இடமான ஜீவனஸ்தானத்திற்கும் குருபார்வை கிடைப்பதால் இந்த ஆண்டு பொதுவாக வருமானம் நல்லவிதமாகவே இருந்து வரும். 12-ம் இடமென்பது பொதுவாக விரைய ஸ்தானம் என்பார்கள். இதேவீடுதான் ஒருவரின் முதலீடு, ஒருவருடைய பொருள் வாங்குதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த வீட்டிற்குக் குருபார்வை இருப்பதால் ஒருவர் நல்லமுறையில் முதலீடு செய்ய முடியும். அதேபோல் சகாய விலையில் பொருட்களை வாங்க முடியும்.  

ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்களில் செவ்வாயின் பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உடலில் காயங்கள், சிராய்ப்புக்களுக்கு வாய்ப்புண்டு. அதே போன்று 2019 புரட்டாசி மாதத்திலும் ஜென்மராசிக்கு செவ்வாய் வருவதால் உடலில் காயங்கள் ஏற்படக்கூடும். ஆகவே இந்த மாதங்களில் கூர்மையான கருவிகளைக் கையாளும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் கவனத்துடன் இருத்தல் நல்லது.  

அடுத்தது குடும்ப வாழ்க்கையைப் பார்ப்போம். பொதுவாகக் குடும்ப வாழ்க்கை அமைதியாகத் தோன்றினாலும், மார்கழி, தை மாதங்களில் சற்றுப் பொறுமையுடன் இருத்தல் அவசியம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு இடமுண்டு.

இந்த ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியின் மூலம் ஸ்திரசொத்துக்கள் வாங்கும் யோகம் இருக்கிறது. வீடோ அல்லது நிலமோ நல்ல முறையில் வாங்க முடியும். குழந்தை பாக்கியத்தை எதிர்பார்ப்போருக்கு சற்றுத் தாமதமாகவே அந்தப் பாக்கியம் கிடைக்கும். 5-ம் வீட்டில் சனி இருப்பதால், 2-ம் வீட்டிற்கு சனியின் பார்வை ஏற்படுகிறது. இதுதான் தாமதத்திற்குக் காரணம். சனிக்குத் தகுந்த பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

வியாபாரம் செய்வோருக்கு: வியாபாரிகள் இந்த ஓராண்டு முழுவதும் எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும். 7-ம் வீட்டிற்குடைய சனி 5-ல் இருப்பதால் சற்று ஏமாற்றமடைய வாய்ப்புக்கள் உண்டு. ஆகவே வியாபாரத்தில் சற்று அதிகப்படியான கவனம் தேவை.

உத்தியோகஸ்தர்களுக்கு: 6-ம் வீட்டு அதிபர் 5-ல் இருப்பது சற்று பாதகமான விஷயம் என்றாலும் 10-ம் வீட்டிற்கு குருபார்வை இருப்பது சாதகமான விஷயம்தான். வேலை வேட்டையில் இருப்போருக்கு  சற்றுத் தாமதத்திற்குப் பின் வேலைக் கிடைக்கும். அதேபோல் பதவி உயர்வு எதிர்பார்ப்போருக்கு சிறிது ஏமாற்றத்திற்குப்பின் பதவி உயர்வு கிட்டும்.

பரிகாரம்: தினமும் அருகில் உள்ள சிவன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய் தீபம் போடலாம். அனுமன் சாலீஸா படித்து வரலாம். 

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2,3,4 பாதங்கள் ஹஸ்தம், சித்திரை 1,2 பாதங்கள்)

ஜென்மராசிக்கு 3-ல் குரு. இவர் 7-ம் வீடு, 9-ம் வீடு மற்றும் 11-ம் வீடுகளைப் பார்க்கிறார். 7-ம் வீட்டிற்கு குருவின் பார்வை கிட்டுவதால் இந்த ராசியில் திருமணமாகாதோருக்கு திருமணம் ஆகக்கூடிய  வாய்ப்புக்கள் அதிகம். பலர் ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டுமென விழைந்திருப்பார்கள். 

அவர்கள் ஆசை இந்தாண்டு நிறைவேறும். 11-ம் இடமென்பது ஒருவரின் ஆசைகள் நிறைவேறுதலைக் குறிக்கும் வீடு. அதற்கு குருவின் பார்வை இருப்பதால் நீங்கள் நெடுநாளாக ஆசைப்பட்டவை  ஈடேறும் காலம் வந்து விட்டது. அவைகள் இந்த ஆண்டு நிறைவேறும்.

பெண்களுக்கு ஆடை அணிகலன்கள் யோகம் இந்த ஆண்டு இருக்கிறது. ஆகவே ஆபரணத்திற்கு ஆசைப்படும் பெண்களுக்கு அவர்கள் ஆசை நிறைவேறும். அதேபோன்று ஆடை சேர்க்கைக்கு ஆசைப்படும்  பெண்களுக்கும் இந்த ஆண்டு அவர்களது ஆசை நிறைவேறும்.  

இந்த ஆண்டு ஆரம்பத்தில் கர்ப்பமாய் இருக்கும் பெண்கள் சற்று முன் எச்சரிக்கையுடன் மருத்துவ ஆலோசனையுடன் நடக்க வேண்டும். மகப்பேறு எளிதாய் முடிய இது உதவியாக இருக்கும்.  

இளைய சகோதரத்துடனான உறவு நல்ல முறையில் இருக்கிறது. அவர்களால் ஆதாயம் காணப்படுகிறது. படிக்கும் மாணவர்கள் படிப்பில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள்  அதிக மதிப்பெண்கள் பெறமுடியும்.  வீடு, வாசல் வாங்க விழைவோர் சற்று மிகுந்த பிரயாசனையுடந்தான் வாங்க முடியும். அது உடனடியாக நடக்காது. வாய்ப்புக்கள் கை நழுவிப்போய் பின்தான் வாங்க  முடியும். 

தை, மாசி மாதங்களில் இவர்கள் உடல் நிலை பாதிப்பிற்குள்ளாகும். சிலருக்கு நரம்பு சம்மந்தமான உபாதைகள் இருந்து வரும். ஏற்கனவே அத்தகைய உபாதையில் இருப்போருக்கு அது சற்று  அதிகமாகும்.  

வியாபாரத்திலிருப்போருக்கு: இந்த குருப் பெயர்ச்சியின் காரணமாக வியாபாரிகளுக்கு நல்ல முறையில் விற்பனை அதிகரிக்கும். அதன்காரணமாக பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். இது அவர்களுக்கு  ஓர் அனுகூலமான ஆண்டு என்றுதான் கூறவேண்டும்.

உத்தியோகத்திலிருப்போருக்கு: இது சற்று போராட்டமான ஆண்டுதான். உத்தியோகம் பெறவும் போராட வேண்டும். பதவி உயர்வு பெறவும் போராட வேண்டும். மேலதிகாரிகளின் ஆதரவு சற்றுக்  குறைவாகவே காணப்படுகிறது. வேலைப்பளுவும் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. 

பரிகாரம்: சனிபகவானை சனிக்கிழமைகளில் வலம் வந்து எள் தீபமேற்றி வணங்கி வந்தால் தொல்லைகள் சற்றுக் குறையும்.

{pagination-pagination}

துலாம் (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி, விசாகம் 1,2,3 பாதங்கள்)

துலா ராசிக்கு அதிபதி சுக்கிரன். 6-ம் வீட்டின் அதிபதி குரு. கடந்த ஓராண்டாக குருவானவர் ஜென்ம ராசியில் இருந்து வந்தார். இதன் விளைவாக அடிக்கடி உடல் நலபாதிப்பு இந்த ராசிக்காரர்களுக்கு இருந்து வந்திருக்கும். இப்போதைய குருப்பெயர்ச்சியால் இவ்வளவு நாளாக அனுபவித்து வந்த உடல் உபாதைகள் ஓர் முடிவுக்கு வரும். வெகுநாளாக உபாதையில் இருப்போருக்கு நோயின் தாக்கம் ஓரளவு குறையும்.  

தனஸ்தானமான2-ம் வீட்டில் குரு இருப்பது நல்ல பணப்புழக்கத்தைக் கொடுக்கும். "காரகோபாவனா சாய" என்பார்கள். அந்த விதி சரிப்பட்டு வராது. 2-ம் வீடு தனஸ்தானமாக இருப்பினும் தனகாரகன் 2-ம் வீட்டில் இருப்பது நல்ல பணப்புழக்கத்தையே கொடுக்கும். பணப்புழக்கத்தைக் கெடுக்காது. குடும்பத்தில் அமைதி நிலவும்.  

3-ம் இடத்தில் சனி இருப்பதால் இளைய சகோதரத்துடன்னான உறவு சுமூகமாக இருக்காது. அவ்வப்பொழுது மனக்கசப்புகள் உண்டாகும். வரும் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் மனக்கசப்பு  சற்றே அதிகமாக இருக்கும். ஆகவே நிதானத்தைக் கடைப்பிடித்து உறவு மோசமாகாது பார்த்துக்கொள்ளுதல் அவசியம்.

எல்லோருக்கும் வீடு,வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்குக் காலம் கனிந்து வரவேண்டும். ஐப்பசி, சித்திரை, வைகாசி மாதங்கள் அனுகூலமானவை.  அதேபோல் வாகனமும் இக்காலத்தில் வாங்க எல்லோருக்கும் ஆசை இருக்கும். இந்த ஆண்டு பங்குனி, ஆடி மாதங்கள் மிக அனுகூலமான மாதங்கள். வாகனம் என்றால் ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் மட்டும் அல்ல, 4 சக்கரங்களைக் கொண்ட காரும் உள்ளடக்கம்.

புத்திர பாக்கியத்திற்காக ஏங்குவோருக்கு இந்த ஆண்டு ஓர் அனுகூலமான ஆண்டு ஆகும். புத்திர உற்பத்தியில் கோளாறு இருப்பவர்கள் தக்க மருத்துவம் எடுத்துக்கொண்டால் பிள்ளைப்பேறு பெறுவதில் தடையேதும் இருக்காது.  

சிலர் வியாபார விஷயமாகவோ, அல்லது வேறு சில செலவுகளுக்காகவோ கடன் பெற முயற்சிப்பார்கள். அந்தக்கடன் இதுவரையில் கிடைக்காமல் போகலாம். ஆனால் இந்தக் குருப்பெயர்ச்சி மூலம் உங்களுக்கு அந்தக்கடன் கிடைக்கும். ஆக வங்கி மூலமாகவோ அல்லது வேறு இடத்திலோ முயற்சி செய்பவர்கள் தங்கள் முயற்சியைத் தீவிரப்படுத்த வேண்டும்.

திருமணமாகாத ராசிக்காரர்களுக்கு மாசி, பங்குனி, ஆவணி ஆகிய மாதங்கள் ஆதரவான பலன்களைக் கொடுப்பனவாக இருக்கின்றன. ஆகத் திருமணம் ஆகாதோர் தங்களுடைய தேடலைத் தீவிரப்படுத்தவும்.

பூர்வீக சொத்துக்கள், பி.எப்., கிராஜுவிட்டி ஆகியவை கிடைக்காமல் இருப்போருக்கு இந்த ஆண்டு அவை கிடைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. இந்த ராசிக்காரரின் வாழ்க்கைத் துணைவர் அல்லது துணைவிக்கு சேர வேண்டிய பணமோ அல்லது சொத்தோ வந்து சேரும்.

உங்கள்  நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரத்துடன் ஐப்பசி, கார்த்திகை, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது. ஏனெனில் மனக்கசப்புக்கு அந்த மாதங்களில் இடமுண்டு. 

உத்தியோகஸ்தர்களுக்கு

வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கு இந்த ஆண்டு வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். 6-ம் வீட்டிற்குடைய குரு தனஸ்தானத்தில் இருப்பதால் இந்தக் குருப்பெயர்ச்சி  ஆனவுடனேயே வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும்.  

வியாபாரிகளுக்கு

கார்த்திகை, மார்கழி, மாசி, சித்திரை, ஆவணி ஆகிய மாதங்கள் அனுகூலமாக இருக்கின்றன.

{pagination-pagination}

விருச்சிகம்: (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை)

பொதுவாக ஜென்மத்தில் குரு இருப்பது விரும்பத்தகாத அமைப்பு என்று கூறுவார்கள். ஆனால் குருவானவர் இரண்டு மற்றும் 5-ம் வீடுகளுக்கு அதிபதி. ஆகவே ஜென்மத்தில் குரு இருப்பது கெடுதலைச் செய்யாது. இந்த ஆண்டு சுய உழைப்பு மூலம் சம்பாதிப்பார்கள். உடல்நிலை ஆரோக்கியமாகக் காணப்படும்.

குடும்பத்தில் அமைதி சற்றுக் குறையும். சில சமயங்களில் குழப்பமும் இருந்து வரும். பணப்புழக்கமும் மிகச் சரளமாக இல்லை. சமயங்களில் பணப் பற்றாக்குறை இருந்து வரும்.

இளைய  சகோதரத்துடனான உறவில் மாற்றங்கள் தெரியும். சமயங்களில் அது மனதுக்கு உகந்ததாகக் கூட இருக்காது. மனதிற்கு மகிழ்ச்சியற்ற செய்திகள் சில வரக்கூடும். அண்டை, அயல் வீட்டாரிடம் பழகும்போது எச்சரிக்கையுடன் பழகவும். அவர்களுடன் மனக் கசப்பு வர வாய்ப்பு உண்டு.  

வீடு, வாசல் வாங்கவேண்டுமென்ற அவா எல்லோருக்கும் ஏற்படுவது இயல்பு. கார்த்திகை, மார்கழி, ஆடி, அவணி மாதங்கள் வீடு வாங்குவதற்கு அனுகூலமான மாதங்களாகத் தெரிகின்றன. ஆடியில் வாங்க முடியுமா என சிலர் கேட்கலாம். ஆடியில் கிரகப்பிரவேசம் செய்யாது ஆவணியில் செய்யவும். தாயாருடன் நல் உறவில் இல்லாதவர்களுக்கு மேலே கூறிய மாதங்களில் உறவு சற்று சீராகும். சிலர் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொள்ளுவர். பிள்ளைகளுடன் நல்லுறவு ஏற்படும். புத்திர பாக்கியத்திற்காக ஏங்குபவர்களுக்கு இந்த ஆண்டு புத்திர பாக்கியம் கிடைக்க வழியுண்டு.  

ராசியதிபதியாகிய செவ்வாயே 6-ம் வீட்டிற்கும் அதிபதியாவதால் பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் உடல் நலத்தை சற்றுக் கூடுதலாகப் பாதுகாப்பது அவசியம். உடலில் காயங்கள், ரணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகவே வாகனத்தில் செல்லும் போதும், கூறிய ஆயுதங்களைக் கையாளும் போதும் சற்று எச்சரிக்கை அவசியம்.

7-ம் இடமான களத்திரஸ்தானத்திற்கு குருவின் பார்வை இருப்பதால் திருமணம் ஆகாதோருக்கு திருமணம் ஏற்பட வாய்ப்பு உண்டு. குடும்பஸ்தானத்தில் சனி இருப்பதால் சற்று தடங்கல்கள் ஏற்பட்டுப் பின் திருமணம் ஆகும்.  

பிதுராஜித சொத்துக்களை எதிர்பார்ப்போருக்கு உடனடியாகக் கிடைக்காது. சற்றுத் தாமதமாகும். அதேபோல் ஓய்வு பெற்றவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தொகைகள் உடனடியாகக் கிடைக்காது. கால தாமதம் ஆகும்.

மூத்த சகோதரத்துடனான உறவில் சற்றுப் பின்னடைவு காணப்படுகிறது. அதேபோல் நெருங்கிய நண்பர்களுடனும் மனக்கசப்பிற்கு இடமுண்டு. கார்த்திகை மார்கழி, தை மாதங்களில் மனக்கசப்பு தீவிரமடைய வாய்ப்புக்கள் அதிகம். ஆகவே சற்று விட்டுக் கொடுத்துப்போவது அவர்களுக்கு நல்லது.  

உத்தியோகஸ்தர்களுக்கு: வேலை வேட்டையில் இருப்போருக்கு மாசி, பங்குனி, ஆவணி மாதங்கள் ஆதரவாய் இருக்கின்றன. அதேபோல் பதவி உயர்வு எதிர்பார்ப்போருக்கும் மேலே கூறிய மாதங்கள் அனுகூலமானவை.

வியாபாரிகளுக்கு: வியாபாரிகளுக்குப் பொதுவாக வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், பணப்புழக்கமும் தென்படுகிறது. விற்பனைக்குரிய பண்டங்கள் தேக்கமடையாமல் விரைவில் விற்பனையாகும்.

பரிகாரம்: ராசி அதிபதியான செவ்வாயை வணங்கி வர அனைத்தும் சுபமாகும். திருப்பதிக்குச் சென்று வரத் திருப்பம் உண்டாகும். 

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்)  

ஜென்ம ராசியில் சனி. பொதுவாக ஜென்ம லக்கினத்திலோ அல்லது ஜென்ம ராசியிலோ சனி இருப்பது நல்லது அல்ல. முன்னேற்றம் தடைப்படும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். ஜென்ம ராசியில் சனி இருப்பதால் 7-ம் இடத்திற்கு சனியின் பார்வை கிடைக்கிறது. ஆகத் திருமணம் தாமதமாகும். ஏதாவது நல்ல செய்தி எதிர்பார்த்திருந்தால் அது கிடைக்கத் தாமதமாகும். அதேபோல் வேலை தேடும் படலத்தில் இருப்போருக்கு வேலை கிடைக்கத் தாமதம் ஆகும். அதிகப்படியாக வேலைக்காக அலைய வேண்டியது இருக்கும்.

இரண்டாம் இடம் என்பது வாக்கு ஸ்தானம் ஆகும். இதில் கேதுவானவர் மாசி மாதம் முடிய அமர்ந்து இருக்கிறார். 2-ல் கேது இருப்பது மற்றவர்களைக் காயப்படுத்திப் பேசச் சொல்லும். அதாவது “யாகாவாராயினும் நா காக்க” என்னும் குறள் இவர்களுக்குப் பொருந்தும் ஆகவே சற்று நிதானித்துப் பேசுவது இவர்களுக்கு நல்லது.  

இந்த ராசிக்காரர்களுக்கு அடிக்கடி வெளியூர்ப்பயணம் செல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகம். இந்த ஆண்டில் அதை அறியப்படும் படியான நிகழ்வுகள் நடக்கும். 4-ம் இடமான ஸ்த்ர சொத்துக்கள் வாங்கும் இடத்திற்கு குருவின் பார்வை. அதுவும் தன் சொந்த வீட்டைப் பார்க்கிறார். ஆகவே சொந்த வீடு வாங்க விழையும் இந்த ராசிக்காரர்களுக்கு இது ஒரு அனுகூலமான காலம் ஆகும். சிலர் தங்கள் குழந்தையின் நலனுக்காக இன்சூரன்ஸ், சேமிப்புக் கணக்குப் போன்றவற்றில் முதலீடு செய்வார்கள். 

வியாபாரத்தில் இருப்போருக்கு

பொதுவாக இந்தப்பெயர்ச்சியின் மூலம் வியாபாரம் சாதாரணமாகத்தான் இருக்கும். அதிக அளவில் முன்னேற்றம் காண்பது அரிது. தனிப்பட்ட ஜாதகத்தில் வியாபாரத்தில் உயர்வு இருந்தாலொழிய உயர்வு காண்பது முடியாது.

உத்தியோகஸ்தர்களுக்கு

ஜீவனஸ்தானத்திற்கு சனியின் பார்வை இருப்பதால் பதவி உயர்வு பெறுவது சற்றுக் கடினமான செயல். அதேபோல் வேலைதேடும் படலத்தில் இருப்போருக்கும் கடின உழப்பிற்குப் பிறகே வேலைக் கிடைக்கும்.

பரிகாரம்: சிவன் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் ஏற்றலாம். சனிக்கிழமைகளில் நவக்கிரகம் சுற்றி வரவது நல்லது. 

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2,3,4 பாதங்கள், திருவோணம், அவிட்டம்1,2 பாதங்கள்)

மகர ராசி நேயர்களுக்கும் ராசியதிபதி 12-ல் அமர்ந்துள்ளார். 2-ம் இடத்திற்கு அவருடைய 3-ம் பார்வை கிடைக்கிறது. ஆகத் தனஸ்தானத்திற்கு சனியின் பார்வை இருப்பதால் பணப்புழக்கம் சற்று மந்தமாகவே இருக்கும். பணப்புழக்கம் குறைவதனால் அவர் பணம் செலவழிக்கவும் சிறிது சிரமப்படுவார். ஜனன ஜாதகம் நன்றாக இருந்தால்தான் இத்தகைய சிரமத்திலிருந்து வெளிவர முடியும். 

2-ம் இடம் தனஸ்தானம். தனஸ்தானாதிபதி 12-ல் இருப்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். அதாவது வீண்செலவுகள் அதிகரிக்கும். ஆகவே பணவரவை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்.  

மூன்றாம் இடத்திற்கு குருபார்வை. குருவானவர் 11-ம் இடத்திலிருந்து பார்க்கிறார். ஆக சகோதரத்திடமிருந்து உதவி எதிர்பார்க்கலாம். மூன்று, மற்றும் 12-ம் வீடுகளுக்குடைய குரு 11-ல் இருப்பது பிரயாணங்களால் அனுகூலம். எந்த நோக்கத்திற்குச் சென்றார்களோ அந்த நோக்கத்திற்கு வெற்றி ஆகியன கிடைக்கும். சிலர் வெளிநாட்டுப் பயணங்களும் செல்வார்கள். அத்தகைய பயணத்தால் அவர்களுக்கு நன்மையே கிடைக்கும். 

படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் முன்னேற்றம் கிடைக்கும். கல்லூரிப் படிப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குப் படிப்பில் எவ்விதத் தடையும் இருக்காது. அவர்கள் விரும்பிய கல்வியில் இடம் கிடைக்கும். வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்க விழைவோருக்கு அவர்கள் எண்ணம் நிறைவேறும். ஜனன ஜாதகத்தில் வாகன யோகம் உள்ளோருக்கு இந்தக் காலக் கட்டத்தில் வாகனம் வாங்க முடியும்.

5-ம் வீட்டிற்குக் குரு பார்வை கிடைப்பதால் புத்திரபாக்கியத்தை எதிர்பார்ப்போருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு ரேஸ், போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலிருந்து பணம் கிடைக்கும். கலை உலகில் இருப்போரும் நல்ல புகழுடன் இருப்பார்கள். அவர்களுக்கு வரவேண்டிய பணமும் வந்து சேரும்.

தகப்பனாரிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்காது. அவருடனான உறவிலும் விரிசல் ஏற்படும். தர்மகாரியங்களிலும் உங்கள் பங்களிப்பு மறக்கப்படும். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பெயர் அதில் கிடைக்காது.

வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு: 7-ம் இடம் வியாபாரத்தைக் குறிக்கிறது. அதற்கு லாபஸ்தானத்திலிருந்து குருவின் பார்வை கிடைப்பதால் வியாபாரத்திற்குக் குறைவில்லை. சரக்குகள் தேங்காது.

உத்தியோகஸ்தர்களுக்கு: அவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பதோடு செய்த வேலைக்குக் கொடுக்கப்பட வேண்டிய அங்கீகாரமும் சரிவரக் கிடைக்காது. வேலை தேடுவோருக்கும் பெறு முயற்சிக்குப்பின் வேலைக் கிடைக்கும்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் அருகிலுள்ள கோவிலுக்குச் சென்று சனிபகவானை வணங்கி வரவும்.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3,4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1,2,3 பாதங்கள்)

ராசியதிபதி சனி 11ல், இரண்டு, பதினொன்றாம் வீட்டு அதிபதி குரு 10-ம் வீட்டில் பெயர்ச்சியாகிறார். இது ஒரு யோகமான கிரக நிலை. ராசியதிபதி 11-ல் இருப்பதால் நீங்கள் நினைக்கும் காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். எதிர்ப்புக்களை மிகச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர் நடுவில் மிக்க மரியாதையுடனும், செல்வாக்குடனும் இருப்பீர்கள். 

இரண்டாம் வீட்டிற்குடைய குரு 10-ல் இருப்பதால் உங்கள் பொருளாதாரம் மிகச் சரளமாக இருக்கும். குடும்பத்தில் இதுவரையில் இருந்து வந்த பிணக்குகள் மற்றும் மன வேற்றுமைகள் முற்றிலுமாக அகன்று விடும். கடனுபாதைகளால் சிரமப்பட்டு வந்தவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.  

ஸ்திர சொத்துக்கள் வாங்கத் திட்டமிடுவோருக்கு இது அனுகூலமான காலம். குருபார்வை 4-ம் இடத்திற்குக் கிடைப்பதால் அவர்கள் எண்ணப்படியே வீடு கட்ட முடியும். வீடு கட்டுவதற்குக் கடனுதவியும் கிடைக்கும். நினைத்ததைவிடசற்றுப் பெரிதான வீடே கட்டலாம்.  

குடும்பஸ்தானமான 2-ம் வீட்டிற்குக் குரு பார்வை இருப்பதால் புத்திர பாக்கியத்திற்கு ஒன்றும் குறைவில்லை. மகப் பேற்றை எதிர்நோக்கியவர்களுக்கு நிச்சயமாகக் குழந்தைப் பேறு உண்டாகும். அதே சமயத்தில் 5-ம் வீட்டிற்கு சனியின் பார்வை இருப்பதால் சற்றுத் தாமதமாகும். சிற்சில உபாதைகள் இருந்து வரும். ஆகத் தக்க மருத்துவ உதவியுடன் இருந்து வந்தால் நிச்சயமாக குழந்தைப்
பேறு உண்டாகும்.

வேலை வேட்டையில் இருப்போருக்கு இந்த குருப் பெயர்ச்சி ஒரு நல்ல திருப்பத்தைக் கொடுக்கும். 2-ம் வீட்டு அதிபதி குரு 10-ல் இருப்பதால் வேலை உடனே கிடைக்கும். 6-ம் வீட்டிற்கும் குருவின் பார்வை இருப்பதால் நிம்மதியாக உங்கள் வேலை வேட்டையைத் தொடருங்கள். வெற்றி உங்களுக்கே.

வியாபாரிகளுக்கு: அவர்களுக்குக் குறிப்பிடும்படியான மாற்றம் எதுவும் இல்லை. அவர்கள் ஜெனன ஜாதகத்தில் நல்ல தசா புக்திகளாக இருப்பின் அவர்கள் வியாபாரத்திற்குக் குறைவில்லை. உயர்வே கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு: உத்தியோகத்தில் இருந்து வந்த அசாதாரண சூழல் இனி இருக்காது. நல்ல சுமூகமான நிலையே இருந்து வரும். மேலதிகாரிகளின் ஆதரவு இருந்து வரும். பதவி உயர்வுக்குக் காத்திருப்போருக்கு அது கிடைக்கக் கூடிய சூழல் இருந்து வரும். ஜனன ஜாதகத்திலும் உத்தியோகத்திற்கு ஆதரவான காலம் இருந்தால் அவர்களுக்கு இது பொற்காலமே. 

{pagination-pagination}

மீனம்: (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசிக்கு குருவின் பார்வை. ராசியதிபதி குரு 9-ம் வீட்டில் இடம் பெயர்ச்சியாகிறார். இது ஒரு மிக உயர்ந்த கிரக நிலை “ஓடிப் போனவனுக்கு 9-ல் குரு” என்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு கோச்சாரரீதியாக 9-ல் குரு வந்திருக்கின்றது. ஆக இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள்தான். ஒருவர் எவ்வளவுதான் கெட்டிக்காரராக இருந்தாலும் தெய்வ அருள் இல்லாவிட்டால் வாழ்க்கையில் பிரகாசிக்க முடியாது. இந்தப் பெயர்ச்சி மூலம் இவர்களுக்கு தெய்வ அருள் கூடவே வருகிறது.   

ராசிக்காரரின் வாழ்க்கைத் துணைவருக்கோ அல்லது வாழ்க்கைத் துணைவிக்கோ எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை அமைதியாகக் காணப்படுகிறது. இளைய சகோதரத்திடமிருந்து உதவிக் கிடைக்கும். இதுவரையில் மனத்தாங்கல் இருந்தால் அவை சரியாகிவிடும். வெளியூர்ப்பயணங்கள் வெற்றியைக் கொடுக்கும். தொழில் சம்மந்தமாக வெளியீர்ப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும். சுபச் செய்திகள் இவர்களுக்குக் கிடைக்கும்.

தாயாருடனான உறவு சற்றுப் பின்னடையும். ஆகவே உறவை மோசமடையச் செய்யாது நிதானமாக நடந்து கொள்ளவும். வீடு, வாசல் போன்ற ஸ்திர சொத்துக்கள் வாங்க நினைப்போருக்கு அவை வாங்கி முடிக்க சற்றுத் தாமதமாகும். சற்றுத் தாமதம்தானே தவிர முடியாமல் போகாது. மாணவர்கள் படிப்பில் சற்று அதிக கவனம் செலுத்த வேண்டும். தங்கள் கவனத்தைச் சிதறவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.  

புத்திர பாக்கியத்திற்காகக் காத்திருப்போருக்கு வரும் பங்குனி மாதத்திற்குமேல் நல்ல காலம் காத்திருக்கிறது. இதுவரையில் புத்திரப் பிறப்பு சம்மந்தமான பிரச்னை உள்ளவர்களுக்கு பங்குனிக்குமேல் எல்லாம் சரியாகிவிடும். 

திருமணமாகாதோருக்கு சில தடைகளுக்குப் பிறகு திருமணம் நடக்கும். அந்தத் தடைகளுக்காகக் கவலைப்பட வேண்டாம். எல்லாம் சரியாகிவிடும். நீதிமன்றம், கேஸ் என்று அலைந்து கொண்டிருப்போருக்கு அவை எல்லாம் ஒரு முடிவுக்கு வரும். பொதுவாக இந்த ராசிக்காரர்களுக்கு இந்த குருப் பெயர்ச்சியால் பிரதிகூலத்தைவிட அனுகூலமே அதிகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com