நீண்ட நாட்களாக குரு பெயர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில், இன்று இரவு 10.05 மணிக்கு துலா ராசியில் இருக்கும் குரு பகவான் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சியாகின்றார்.
வாக்கிய பஞ்சாங்கபடி வருகின்ற புரட்டாசி 18-ம் தேதியும் (4.10.2018), திருக்கணித பஞ்சாங்கபடி புரட்டாசி 25-ம் தேதியும் (11.10.2018) பெயர்ச்சியாவதை முன்னிட்டு, அனைத்து சிவாலயங்கள், குரு பரிகாரஸ்தலங்கள் மற்றும் ஜோதிடர்களும் ஆன்மீகவாதிகளும் குரு பெயர்ச்சி யாகங்களுக்கும், பரிகார பூஜைகளுக்கும் விமரிசையாகச் செய்து வருகின்றனர்.
நவகிரஹங்களில் சுபக்கிரகமாக விளங்கும் குரு பகவான், தனுர் மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாகவும், கடக ராசியை உச்சம் பெறும் வீடாகவும், மகர ராசியை நீசம் பெறும் வீடாகவும் கொண்டவர். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி குரு பகவானின் ஆதிக்கம் நிறைந்த நட்சத்திரங்களாகும். மேலும், குரு பகவான் புத்திர காரகனாகவும் தன காரகனாகவும் விளங்குவதால், வாழ்வில் ஒருவன் சிறப்புகள் பெற வேண்டுமானால் குரு பகவானின் அருள்பார்வை நிறைந்திட வேண்டும்.
ஆலங்குடி, தென்குடித்திட்டை, குருவித்துறை, பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயில், சென்னை பாடி, திருவலிதாயநாதர் உள்ளிட்ட கோயில்களில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு லட்சார்ச்சனை, சிறப்பு யாகம், அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
இந்த குருப்பெயர்ச்சியால் ரிஷபம் கடகம் மீனம் நன்மை பெறும் ராசிகளாகவும், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் ஆகியவை நன்மை தீமை இரண்டும் கலந்த பலன்களும், மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய ராசிகள் பரிகாரத்தின் மூலம் பயன் பெறும் ராசிகள் ஆகும்.