2018-ம் ஆண்டுக்கரன குருப்பெயர்ச்சி இன்று இரவு 10.05 மணிக்கு நிகழ உள்ளது. குருபகவான் துலா ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆக உள்ளார்.
நவக்கிரகங்களில் முழு சுப கிரகம். வாழ்வில் அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர் - சப்த ரிஷிகளில் ஆங்கிரஸ முனிவரின் மகன் குரு என்றும் பிரகஸ்பதி என்றும் வியாழ பகவான் அழைக்கப்படுகிறார்.
இவர் தேவர்களுக்கு எல்லாம் குரு. நம் வாழ்வில் 2 விஷயங்கள் மிக முக்கியம். அதாவது தனம் என்று சொல்லக்கூடிய பணம், 2-வது புத்திர சம்பத்து என்று சொல்லக்கூடிய குழந்தை செல்வம். இந்த இரண்டையும் அளிக்கக் கூடிய சர்வ வல்லமை பெற்ற கிரகம் குரு.
ஸ்ரீவிளம்பி வருஷம் தக்ஷிணாயனம் வருஷ ரிது புரட்டாசி மாதம் 18ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 04.10.2018 கிருஷ்ணபக்ஷ ஏகாதசியும் வியாழக்கிழமையும் ஆயில்ய நக்ஷத்ரமும் ஸித்தி நாமயோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 40.00க்கு - இரவு 10.05க்கு குரு பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறுகிறார்.
விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தொடர்ந்து 1 வருட காலத்திற்கு இந்த ராசியில் சஞ்சாரம் செய்து அருளாசி வழங்குவார். விருச்சிக ராசிக்கு வரும் குரு பகவான் தனுசு ராசிக்கு விகாரி வருடம் ஐப்பசி மாதம் 20ம் தேதி - 05.11.2018 - திங்கட்கிழமையன்று மாறுகிறார்.
தற்போது மாறக்கூடிய குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனது ஐந்தாம் பார்வையால் மீன ராசியையும் - ஏழாம் பார்வையால் ரிஷப ராசியையும் - ஒன்பதாம் பார்வையால் கடக ராசியையும் பார்க்கிறார். குரு பகவானுக்கு ஸ்தான பலத்தை விட த்ருக் பலமே அதிகம். அதாவது இருக்கும் இடத்தின் பலத்தினை விடப் பார்க்கும் பலமே அதிகம். எனவே குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண பலன்கள் பெறும்.
இந்தாண்டு குருப்பெயர்ச்சியில் மேஷம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம் மற்றும் தனுசு ஆகிய ராசிக்காரர்கள் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும்.
இன்று இரவு 10.05-க்கு குருபகவான் பெயர்ச்சியாக உள்ளார். எனவே, தோஷம் பெறும் ராசிக்காரர்கள் இன்று இரவோ அல்லது நாளை காலையோ அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று குருவுக்கு வஸ்திரம் சாத்தி, முறையான பரிகாரம், குரு சாந்திக்கான அர்ச்சனை செய்துகொள்ளலாம்.
குருவிற்கு உண்டான பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதாலும், கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவிகளை அளிப்பதாலும், பெரியோர்களிடம் ஆசி பெறுவதாலும் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
குருப்பெயர்ச்சியில் ஏற்படும் சுப பலன்களை அவரவர் ஜென்ம ஜாதகத்தில் உள்ள தசா புத்திக்கு ஏற்ப குருபகவான் அளிப்பார். அதாவது தசா புத்தியானது உங்களுக்கு சாதகமாக இருந்தால், அதிகளவு நன்மையையும், குறைந்தளவு தீமையும் தரவல்லவர்.