கே.சி.எஸ்.ஐயர் கணித்த முதல் நான்கு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - 2018

2018-ம் ஆண்டு குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர்..
கே.சி.எஸ்.ஐயர் கணித்த முதல் நான்கு ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் - 2018

2018-ம் ஆண்டு குருப்பெயர்ச்சி பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் அவர்கள் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் தீயவர்களை இனம் கண்டு விலக்கி விடுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். மற்றவர்களுக்கு பயன்படக்கூடிய அறிவுரைகளை வழங்குவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அவர்களின் உதவிகளையும் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம், மனவளம் மேம்பட யோகா, தியானம் போன்றவற்றைச் செய்வீர்கள். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். 

சமுதாயத்தில் உங்கள் நிலை உயரக் காண்பீர்கள். சிலருக்கு அரசு விருதுகளும் கிடைக்கும். நெடுநாளாக தொடர்ந்து வந்த சட்டச் சிக்கல்களில் இருந்தும் விடுபட்டு விடுவீர்கள். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களாலும் கௌரவப் படுத்தப் படுவீர்கள். இந்த காலகட்டத்தில் அடிக்கடி சிறிய தூரப் பயணங்களைக் செய்யவும் நேரிடும். 

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் தயக்கத்துடனும் பயத்துடனும் செய்து வந்த செயல்களை தைரியத்துடனும் தெளிவுடனும் செய்யத் தொடங்குவீர்கள். அதோடு கூட்டாளிகளும் நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். வீண் வாக்குவாதங்கள் தேவையற்ற விவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து, "கொக்குக்கு ஒன்றே மதி' என்ற ரீதியில் காரியமாற்றுவீர்கள். வீட்டிலும் வெளியிலும் உங்கள் மதிப்பு, மரியாதைகள் கீழிறங்காமல் பார்த்துச் சொள்வீர்கள். சிலருக்கு வெளியூருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்புகள் உண்டாகும். பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது. அன்னையின் உடல்நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். சிறு மருத்துவச் செலவுகளும் உண்டாகும். 

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் சிலர் புதிய வீட்டிற்கு மாற்றம் செய்வார்கள். புதிய வீடு, நிலம் வாங்கும் முயற்சிகளை இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டாம். செய்தொழிலில் சிறிது கடன்சுமை ஏற்பட்டாலும் உபரி வருமானத்தால் அவைகளை சமாளித்து விடுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள்.  குழந்தைகளும் உங்கள் பேச்சு கேட்டு நடப்பார்கள். அவர்களை வெளியூர், வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைப்பீர்கள். எவருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ அல்லது முன்ஜாமீன் போடுவதோ இந்த காலகட்டத்தில் கூடாது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலைகளைக் காண்பீர்கள். தடைகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு திறமையுடன் பணியாற்றி வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள். மேலதிகாரிகள் சற்று பாராமுகமாக இருந்தாலும் கெடுதல் ஏதும் செய்ய மாட்டார்கள். அலுவலக ரீதியிலான பயணங்களை உங்கள் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவும். உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.

வியாபாரிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். அரசு வழியில் அனுகூலங்களைக் காண்பீர்கள். கூட்டாளிகளிடம் பகை, மறைமுக விரோதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும். விளை பொருள்களை புதிய சந்தைகளில் விற்பனை செய்வீர்கள். கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய வேண்டி வரும். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கும்.

அரசியல்வாதிகள் முயற்சிகளில் வெற்றிகளைக் காண்பீர்கள். சமுதாயத்தில் பெயர், புகழ் கூடும். கட்சியில் புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். கட்சி மேலிடம் உங்களின் செயல்பாடுகளை ஊன்றி கவனிக்கும். மறைமுக, நேர்முக எதிர்ப்புகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். தொண்டர்கள் உங்கள் பேச்சுக்கு அடிபணிவார்கள். கலைத்துறையினருக்கு எதிர்பாராத பணம் பெருகும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பயணங்கள் நன்மை தரும். 

பெண்மணிகள் நிம்மதியைக் காண்பார்கள். தெய்வ வழிபாடுகளில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். சிறு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். மாணவமணிகள் இந்த ஆண்டு கல்வியில் நல்ல மதிப்பெண்களை வாங்குவீர்கள். பாடங்களை விடியற்காலை நேரத்தில் எழுந்து படித்து மனப்பாடம் செய்யுங்கள்.

பரிகாரம்: திங்கள்கிழமைகளில் விநாயகப் பெருமானை அருகம்புல் சாற்றி வழிபடவும்.

{pagination-pagination}
ரிஷபம் (கார்த்திகை 2-ஆம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ஆம் பாதம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் மனதிற்குப் பிடித்த வீட்டிற்கு மாறுவீர்கள். சிலர் வசிக்கும் வீட்டை நவீனப் படுத்துவார்கள், புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரத்தில் இருந்த இழுபறிகள் மாறி சீராக வருமானம் வரத் தொடங்கும். உடல் உபாதைகளிலிருந்து விடுபட்டு மிடுக்கான தோற்றத்தைப் பெறுவீர்கள். 

செய்தொழிலில் அபிவிருத்தி செய்ய பயணங்களைச் செய்ய நேரிடும். சாதுர்யத்துடன் பேசி அனைவரையும் கவர்வீர்கள். மனதிலும் தெளிவு பிறக்கும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். குழந்தைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். புத்திர பாக்கியம் கிடைக்காமல் தவித்தவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். முக்கிய பொறுப்புகளை ஏற்று சரியாக நிறைவேற்றுவீர்கள். அனாவசியமாக எவருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருக்கவும்.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் துணிந்து செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும். போட்டி பந்தயங்களிலும் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை விடமாட்டீர்கள். அனைவருக்கும் உங்களால் ஆன உதவிகளைச் செய்வீர்கள். மனதில் தோன்றும் எண்ணங்களை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டாம். எதிரியின் பலம் அறிந்து செய்கைகளை மாற்றிக் கொள்ளவும். உங்கள் புகழ், அந்தஸ்து உயரும். வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். இல்லத்தில் களவு போயிருந்த பொருள் திரும்பவும் கிடைக்கும் காலகட்டமாக இது அமைகிறது.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில்  நெடுநாள்களாக தகராறில் இருந்த சொத்து கை வந்து சேரும். அரசாங்கத்திலிந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் இல்லத்தில் நடக்கும். நண்பர்களாலும் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். கூட்டாளிகளும் உங்களை கலந்தாலோசித்த பின்னரே முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். உறுதியான முடிவுகளை தன்னிச்சையாக எடுப்பீர்கள்.  உங்கள் பழைய அனுபவங்கள் தக்க நேரத்தில் கை கொடுக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் பொருளாதாரத்தில் சுபிட்சங்களைக் காண்பீர்கள். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள். சிலர் ஆர்வக் கோளாறினால் எக்குதப்பாக எதிர்பாராத எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் பேசும்போது கவனத்துடன் இருக்கவும். உங்கள் வேலைகளை சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செய்து வரவும். வியாபாரிகள் இந்த ஆண்டு கூடுதல் எச்சரிக்கையுடன் வியாபாரம் செய்யவும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செயல்படுத்தவும். பணத்தைக் கையாளும்போது கவனமாக இருக்கவும். கூட்டாளிகளை கலந்தாலோசித்தப் பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். விவசாயிகள் சிறு சங்கடங்களைச் சந்திப்பீர்கள். பழைய கடன்களை படிப்படியாக அடைப்பீர்கள். கொள்முதலில் லாபங்கள் இருந்தாலும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் கால்நடைகளுக்கும் செலவு செய்வீர்கள். 

அரசியல்வாதிகள் பொதுச் சேவையில் கண்ணும் கருத்துமாக இருக்கவும். தொண்டர்கள் அனுகூலமாக இருப்பார்கள். முயற்சிகளில் தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றி கிடைக்கும். அனாவசியப் பயணங்களைச் செய்வீர்கள். மேலிடத்தின் அதிருப்பதிக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் உயரும். சக கலைஞர்கள், ரசிகர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

பெண்மணிகளுக்கு கணவன் மனைவி வகையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் கவனம் தேவை. உடன்பிறந்தவர்கள் பிரச்னையை உண்டாக்குவார்கள். சுப காரிய நிகழ்வுகளில் உறவினர்களை உரிய மரியாதையுடன் கௌரவப்படுத்தவும். மாணவமணிகள் படிப்பில் தீவிர முயற்சி செய்து படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். நண்பர்களுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை உளமார  வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

மிதுனம் (மிருகசீரிஷம்3ஆம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். எதிலும் அவசரப் படாமல் நிதானமாகப் பணியாற்றவும். செய்தொழிலில் விழிப்புணர்ச்சியுடன் இருந்து செயலாற்றுவீர்கள்.நேர்முக, மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். செய்தொழிலில் புதிய ரகசியங்களை அறிவீர்கள். உடன்பிறந்தோருக்குத் தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். உடல்உழைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து காரியமாற்றுவீர்கள். பெற்றோருடன் அனுசரித்து செல்வீர்கள். அவர்கள் வழியில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். 

வருமானம் சிறப்பாக இருந்தாலும் சிறிய விரயங்களும் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும். பேச்சில் கவனம் தேவை. மனதில் உத்வேகம் இருந்தாலும் சூழ்நிலைகள் முழுவதும் சாதகமாக அமையாது. ஆன்மிகச் சிந்தனைகள் மெருகேறும் காலகட்டமாக இது அமைகிறது.

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் குடும்பத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பு பெருகும். உற்றார் உறவினர்களின் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். எவரிடமும் அனாவசியமாகப் பேச்சு வேண்டாம். செய்தொழிலில் படிப்படியான வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதார நிலை உயரும். போட்டியாளர்கள் பின்வாங்க மாட்டார்கள். உங்களின் அனைத்து முயற்சிகளும் எந்த வகையிலாவது ஏற்றத்தையும் மாற்றத்தையும் தரும் காலகட்டமிது. 

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் அரசு வகையில் எதிர்பார்த்த சலுகைகள் தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களின் குறைகளைக் கண்டறிந்து தயவு தாட்சண்யமின்றி திருத்துவீர்கள். அவர்களின் தேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றுவீர்கள். உங்கள் செயல்களுக்கு நண்பர்கள் கூட்டாளிகளிடமிருந்து வரவேற்பு கிடைக்கும். பெரியோர்களைத் தேடிச் சென்று அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். நேர் வழியில் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் கிடைக்கும். குடும்பத்தினரையும் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். உங்கள் நிர்வாகத்திறன் பளிச்சிடும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்களின் வேலைப்பளு குறையும். உங்கள் வேலைகளில் ஊழியர்கள் தாங்களாகவே பங்கு கொள்வார்கள். மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கைகளை உணர்வுபூர்வமாக பரிசீலித்து சாதகமான முடிவுகளை எடுப்பார்கள். விருப்பான பணி இடமாற்றங்களையும் பெறுவீர்கள். வருமானம் படிப்படியாக உயரும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக நடக்கும். வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். கூட்டாளிகள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவுவார்கள். சிலர் கூட்டாளிகளை விட்டுப் பிரிந்து தனியாக தொழில் செய்யும் காலகட்டமிது. விவசாயிகள் குறுகிய காலப் பயிர்களையும் ஊடுபயிர்களையும் பயிரிட்டு நலம் பெறுங்கள். கால்நடைகளை வைத்திருப்போர் நல்ல பலன்களைப் பெறுவார்கள். புதிய குத்தகைகளை யோசித்து எடுக்கவும்.

அரசியல்வாதிகள் வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகளைப் பெறுவீர்கள். கட்சிப் பணிகளில் இருந்த குழப்பங்கள் விலகி புதிய பொறுப்புகள் கிடைக்கும். மக்கள் சேவைகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சமுதாயத்தில் உங்கள் கௌரவம் உயரும். அரசு அதிகாரிகள்  உங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவார்கள். கலைஞர்கள் தங்கள் துறையில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வார்கள். அதை உபயோகித்து வெற்றி பெற ஏதுவான சூழ்நிலை உண்டாகும். இதனால் பாராட்டும் புகழும் அடைவீர்கள். சில பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் கணவருடன் ஒற்றுமையோடு இருப்பார்கள். சீரிய முயற்சிக்குப்பிறகு சுபகாரியங்கள் நடக்கும். சமையல் செய்யும் நேரத்தில் கவனத்துடன் இருக்கவும். மாணவமணிகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். வருங்காலத் திட்டங்களுக்கு அடித்தளம் போடுவதற்கான சூழ்நிலை உருவாகும். தன்னம்பிக்கை உயரும். ரகசியங்களை நண்பர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: சீதா ராமரை உள்ளன்புடன் வழிபட்டு வரவும்.

{pagination-pagination}

கடகம் (புனர்பூசம்4-ஆம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

11.10.2018 முதல் 11.04.2019 வரை உள்ள காலகட்டத்தில் தெளிவாக சிந்தித்து காரியமாற்றுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பூத்துக் குலுங்கும். பொருளாதாரம் சீரும்சிறப்புமாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்கள் நண்பர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள். குடும்பத்துடன் வெளியூர் சென்று மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பார்கள். 
அன்னையுடன் இணக்கமாக வாழும் சூழ்நிலை உருவாகும். 

புதிய சொத்துகளை வாங்கவும் நேரிடும். பழைய சொத்துகளின் மூலம் வருமானம் கிடைக்கத் தொடங்கும். சிலருக்கு நெடுநாளைய விற்பனையாகாத சொத்துகள் விற்பனையாகும். குழந்தைகளுக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் வழியில் நன்மைகளும் அனுகூலங்களும் உண்டாகும். சிலருக்கு விருது பெறும் யோகமும் உண்டாகும். காணாமல் போயிருந்த பொருள்கள் மீண்டும் கைவந்து சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு இந்த காலகட்டத்தில் புத்திர பாக்கியம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தையும் மனவளத்தையும் பாதுகாப்பீர்கள். 

12.04.2019 முதல் 12.08.2019 வரை உள்ள காலகட்டத்தில் செய்தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். சிலருக்கு மனதிற்குப்பிடித்த ஊர்களுக்குச் சென்று வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். மனஉற்சாகத்துடன் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். உடன் உழைப்பவர்கள், நண்பர்களை அலட்சியப்படுத்தாமல் அனைவரையும் அரவணைத்துப் பணியாற்றுவீர்கள். உங்கள் செயல்களை சாதனைகளாக மாற்றிக் காட்டுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சியில் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். சமயோஜித புத்தியால் தக்கசமயத்தில் சரியான முடிவெடுப்பீர்கள். தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்துவீர்கள்.

13.08.2019 முதல் 05.11.2019 வரை உள்ள காலகட்டத்தில் புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். சுப முயற்சிகள் நற்பலனைத் தரும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சில அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தானாக தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களால் ஏற்படும் சிறு பிரச்னைகள் தானாகவே விலகிவிடும். கருத்து மோதல்களைத் தவிர்த்திடவும். பொருளாதாரத் தடங்கல்கள் விலகும். வெளிநாடு தொடர்பான காரியங்களும் வெற்றி பெறும். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் முன்னேற்றப் பாதையில் செல்லும் காலகட்டமிது. அலைச்சல் திரிச்சல் இல்லாமல் உங்கள் வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். பேச்சு வார்த்தைகளினால் குழப்பங்கள் வரலாம். சிலருக்கு இடமாற்றங்கள், பதவி உயர்வுகள் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் வெளிப்படையாகப் பழக வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சிக்கல்களைச் சந்திப்பீர்கள். போட்டிகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். உங்களிடம் வேலைப் பார்ப்பவர்கள் அடங்கி நடப்பார்கள். சுகத்தை எதிர்பார்க்காமல் உழைத்தால் நலம் பெறுவீர்கள். விவசாயிகள் கடுமையாக உழைப்பீர்கள். அமோகமான மகசூலைக் காண்பார்கள். விளைபொருள்களின் விற்பனையில் நல்ல லாபம் உண்டாகும். கால்நடைகளால் வரும் லாபம் குறைந்திருக்கும். 

அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், புகழ் உயரும். உங்களுக்கெதிரான வழக்குகள் சாதகமாக முடியும். கட்சி மேலிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். கலைஞர்கள் தேவையான வருமானத்தைக் காண்பார்கள். உங்கள் செயல்களில் சிறிய தடுமாற்றங்களைக் காண்பீர்கள். ஆனாலும் செல்வாக்கு குறையாது. சிறிய தடைகளுக்குப்பிறகே புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். 

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் உதவிகரமாக இருக்கும் நேரமிது.

பரிகாரம்: செவ்வாயன்று துர்க்கையம்மனை  வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com