சென்னை, தம்பு செட்டித் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோயிலில் ஸ்ரீ சாரதா நவராத்திரி பெருவிழா அக்டோபர் 10 முதல் தொடங்குகிறது.
அன்னை ஸ்ரீ காமாட்சி ஸ்ரீ காளிகாம்பாள் எனும் திருநாமம் கொண்டு சர்வ மங்களகாரிணியாகவும், சர்வ துக்கவிமோசினியாகவும், சர்வ விக்னநிவாரிணியாகவும், சர்வவியாதி விநாசினியாகவும், சர்வ சௌபாக்யதாயினியாகவும் ஸ்ரீ சக்ர சாம்ராஜ்ஜினியாய் மேற்கு திசை நோக்கி எழுந்தருளி அன்பர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள். மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி மஹாராஜா அவர்கள் வருகை தந்து வழிபாடு செய்ததும், மாகாளி அருள்பெற்ற மகாகவி சுப்ரமணிய பாரதியார் தன் பாமாலையை சூட்டி வழிபட்டதும் இத்திருத்தலமே.
பிரசித்தி பெற்ற இத்திருக்கோயிலில் நாளை (10.10.2018) புதன்கிழமை முதல் ஐப்பசி திங்கள் ஒவ்வொரு மூன்று நாட்களிலும் ஸ்ரீ காளிகாம்பாள் முறையே ஸ்ரீ துர்கா பரமேஸ்வரியாகவும், ஸ்ரீ மகாலஷ்மியாகவும், ஸ்ரீ சரஸ்வதியாகவும் கொலு வீற்றிருந்து காட்சி தருவாள்.
ஸ்ரீ அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனையுடன் நவராத்திரி உற்சவம் நடைபெறும். தினசரி காலை, மாலை நேரங்களில் ஸ்ரீ சண்டி மஹாயக்ஞம் நடைபெறும்.
மாலை நேரங்களில் இயல், இசை, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மெய்யன்பர்கள் அனைவரும் மேற்படி திருவிழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ அம்பாளின் திருவருளைப் பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.