திருக்கடம்பூர் என தேவாரத்தில் அழைக்கப்படும் மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரி நாதர் ஆகியோர் பாடல்களும் உள்ளன.
இந்த ஆலயம், கடலூர் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் உள்ளது. இந்திரன் வழிபட்டு, அமுதக்கலசமும், முருகன் வழிபட்டு, வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் அமைந்துள்ள 34-வது சிவதலமாகும். தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும். இந்த ஒன்பது வகைக்குள், கடம்பூர் திருக்கோயில், கரக்கோயில் வகையினை சார்ந்தது. இந்த கரக்கோயில் தமிழகத்தில் இங்கு மட்டுமே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
கருவறையே நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டப்பெற்ற அழகிய தேர்வடிவ கோயிலாக உள்ளது. ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில் என்பதால் 1500 ஆண்டுகளுக்கு மேலாகக் கோயில் உள்ளதாக அறியலாம். தற்போது காணும் தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது.
சிற்பக்கலை சிறப்பு மிக்க கோயில், எண்ணற்ற புராண கதைகள், சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. ஒன்பது கருவறை கோட்டங்கள் கொண்ட இக்கோயிலில் தென்முகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆலமர் செல்வனைக் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு வணங்கி மகிழ்வோம்.
4.10.2018 வியாழன் இரவு குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, அன்று மாலை கணபதி பூஜையும், அபிஷேகமும் நடத்தப்பெற்றது. 5.10.2018 வெள்ளியன்று காலை 9.30 மணிக்கு சிறப்பு யாக வேள்வியையும், தொடந்து அபிஷேகத்தையும், ஆலய அர்ச்சகர் விஜய் குருக்கள் செய்தார்.
- கடம்பூர் விஜயன் (9842676797)