திருப்பதி திருமலையில் நவராத்திரி பிரம்மோற்சவம் இன்று தொடங்கியுள்ளது. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழாவானது அக்டோபர் 18-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ம் தேதி தொடங்கி 9 நாட்கள் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இந்நிலையில், இந்தாண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவத்தின் முதல் நாள் விழா இன்று தொடங்கியுள்ளது.
இதை முன்னிட்டு பிரம்மோற்சவத்தின் பூர்வாங்க நிகழ்ச்சியான அங்குரார்ப்பணம் நேற்று மாலை திருப்பதி மலையில் நடைபெற்றது. நவராத்திரி முதல் நாளான இன்று இரவு 7 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி தேவியர்களுடன் வீதிஉலா வருகிறார்.
ஏழுமலையான் கோயிலில் பின்புறம் உள்ள வசந்த உற்சவ மண்டபத்திலிருந்து புற்றுமண் எடுத்துவந்த கோயில் அர்ச்சகர்கள், அந்த மண்ணில் முளைப்பாரியிட்டனர். நவராத்திரி பிரம்மோற்சவத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருவார்கள் என்பதால், அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைத் தேவஸ்தானம் செய்து வருகின்றனர். மேலும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.