உலக மூட்டு நோய் தினம்: முடக்கு வாத நோயிலிருந்து விடுபட சனைச்சர பகவானை வணங்குங்க!

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி உலக முடக்குவாத தினமாக அனுசரித்து..
உலக மூட்டு நோய் தினம்: முடக்கு வாத நோயிலிருந்து விடுபட சனைச்சர பகவானை வணங்குங்க!

உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12-ம் தேதி உலக முடக்குவாத தினமாக அனுசரித்து வரும் நிலையில் ஆர்த்ரைடிஸ் பற்றியும் அந்த நோய் வருவதற்கான ஜோதிட காரணத்தையும் இப்போது பார்ப்போம். வயது முதிர்வு என்றாலே முதலில் எட்டிப் பார்க்கும் நோயில் முக்கியமானது இந்த மூட்டு வலி. இந்த நோயானது ஆர்த்ரைடிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. ஆர்த்ரைடிஸ் மற்றும் ரூமாட்டிக் வியாதிகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு, 1996-ம் ஆண்டிலிருந்து இந்தத் தினத்தை அனுசரித்து வருகிறது. இந்த தினமானது ஆர்த்ரைடிஸ் எனப்படும் முடக்குவாக்கு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை உண்டாக்கவும், அதுகுறித்து நடவடிக்கைகள் எடுக்கவும் உதவுகிறது.

வாத நோய்களில் நாள்பட்ட மூட்டு வலி மிகவும் கடுமையாக இருக்கும். அதிலும் இந்தக் காலத்தில் இளைஞர்களும் இதனால் அவதிப்படுகின்றனர். இந்த வலி வந்தால், மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். இத்தகைய மூட்டு வலி வருவதற்குக் காரணம் உடலில் யூரிக் ஆசிட்டின் அளவு அதிகமாக இருப்பதே ஆகும்.

முடக்கு வாதம் எனும் ஆர்த்ரைடிஸ்

முடக்குவாதம் என்பது உடலின் தாங்குதிறன் எனப்படும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் உடலின் உறுப்புகளைப் பாதிக்கும் நோயாகும். குறிப்பாக மூட்டுத்திசுக்கள் பாதிப்படைந்து பின் எலும்புகளின் வடிவமைப்பையே மாற்றிவிடும். ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் ஆகும். ஆர்த்ரடைடிஸ் உடலில் உள்ள 170-க்கும் மேற்பட்ட எலும்பு இணைப்புகளில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிக்கும். இதனால் வலி, மூட்டுகளின் வளையும் தன்மை இழந்து விரைப்பான நிலை மற்றும் வீக்கம் (வீக்கம் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்) போன்றவை மூட்டு இணைப்புகளில் ஏற்படும்.

அங்கங்களை முடக்கிவிடுவதால் இந்த நோயை முடக்குவாதம் என்று சொல்வார்கள். இதைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன்பே சரகர், சுஸ்ருதர், வாக்படர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை மகாவாத வியாதி என்றும், குடம் என்றும், வாத பலாசம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆங்கில மருத்துவத்தில் இதனை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அவை:

ருமாடாய்ட் ஆர்த்ரைடிஸ் 
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ்
கெளட் எனும் கீல் வாதம்)

ஆர்த்ரைடிஸின் அறிகுறிகள்

மூட்டுகளில் வலி ஏற்படும், மூட்டுகளை நீட்ட, மடக்க இயலாத தன்மை காணப்படும். காலையில் எழுந்தவுடன் இரண்டு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்ய முடியாது. மூட்டுகள் சூடாக இருக்கும், தொட்டால் வலிக்கும். உள்ளேயும் வலி காணப்படும். இதனால் மூட்டை அசைக்கவோ, நீட்டவோ இயலாது. மூட்டுகள் வளைந்து காணப்படும்.

காய்கறிகள் வெட்டுதல், சில பொருட்களை தூக்குதல், எழுதுவது, நாற்காலியிலிருந்து எழுந்திருப்பது, நடப்பது போன்ற செயல்களை செய்யும் போது ஏற்படும் அசைவுகளினால் மூட்டு இணைப்பு/எலும்பு இணைப்புகளில் ஏற்படுகின்ற வலி அல்லது அழுத்தம் அதிகரித்தல் இணைப்புகளில் வீக்கம், இணைப்புகள் வளையும் தன்மையை இழந்து விரைப்பாகக் காணப்படும். வீக்கம் கண்ட பகுதி சிவந்தும் வெப்பமாகவும் இருக்கும்.

கால்சியம் அவசியம்

எலும்புகள் சீராக வளர கால்சியம் சத்து அவசியம். கால்சியம் குறைபாடு ஏற்பட்டால், எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படும். மேலும் வைட்டமின் டி சத்து கிடைக்கப்பெறாதவர்களுக்கு வெறும் கால்சியம் மட்டும் உடலில் கிடைத்தால், கால்சியம் எலும்பில் சேராமல் கழிவு வழியாக வெளியே வந்துவிடும். எனவே கால்சிய குறைபாடு நீங்க பால், பன்னீர், கேழ்வரகு மற்றும் எள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆர்த்ரைடிஸ் எனும் முடக்கு வாத நோய்க்கான ஜோதிட காரணங்கள்
ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கு ஜாதகத்தில் மந்தன் எனப்படும் சனைஸ்வரனே முக்கிய பங்கு வகிக்கிறான். என்றாலும் சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களின் நிலையும் வாத நோயை ஏற்படுத்துகின்றது.

உடம்பின் கட்டுமானத்திற்கு முக்கியமான எலும்பு சம்மந்தமான வியாதிகளை ஜாதகத்தில் நில ராசி அதிபதிகளின் நிலையைக் கொண்டு அறிய முடிகிறது. அந்த விதத்திலும் நில ராசி அதிபதிகளான சுக்கிரன் (ரிஷபம்), புதன்(கன்னி) மற்றும் சனி(மகரம்) ஆகியவற்றின் தொடர்பு முடக்கு வாதம் மற்றும் எலும்பு புரை நோயை ஏற்படுத்துகிறது.

அல்லோபதி மருத்துவத்தில் சுண்ணாம்பு சத்து குறைபாடு எனும் கால்சியம் சத்து குறைவே இந்த நோய்க்கு காரணம் என்கிறது. அந்த விதத்திலும் கால்சியம் எனும் தாதுவிற்கு காரக கிரகம் சனியே ஆகும். மேலும் கால்சியம் சமநிலைக்கு மாங்கனிசு எனப்படும் மெக்னிஷியம் (காரக கிரகம் சூரியன்) இரும்புச் சத்து (காரக கிரகம் செவ்வாய்) ஆகியவற்னின் நிலைப்பாடும் இந்த நோயைத் தெரிவிக்கிறது.  மேலும், சர்க்கரை சத்து அதிகமாவதும் கால்சியம் குறைபாட்டை ஏற்படுத்தி முடக்கு வாதம் மற்றும் எலும்பு புரைநோயை ஏற்படுத்துகிறது. சர்க்கரை சத்திற்கான காரக கிரகம் சுக்கிரன் ஆகும்.

உடம்பில் வைட்டமின் D3 எனப்படும் மெக்னீஷியம் குறைபாடு உள்ளவர்களைச் சூரிய வெளிச்சத்தில் நிற்கச் சொல்லுவது அனைவரும் அறிந்ததே.

சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இணைவு பெறுவது, அசுப பரிவர்த்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தப்படுவது, காலபுருஷனுக்கு மூன்றாம் வீடாகிய மிதுனத்தில் சனி, சுக்கிரன் போன்ற கிரகங்கள் நிற்பது, ஜாதகத்தின் மூன்றாம் வீட்டில் வாத கிரகங்களான சனி, சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் நிற்பது போன்றவை வாத நோயைத் தெரிவிக்கிறது.

வாத கிரஹங்களான சனி, புதன் மற்றும் சுக்கிரனின் வீடுகளை 6/8/12 வீடுகளாக அமைந்து அங்கு இந்த மூன்று கிரகங்களில் ஏதேனும் ஒன்று ஆட்சி பெற்று சனி தொடர்பு கொள்வது. மேலும் சனி மூலை ராசிகள் எனப்படும் மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீனம் ஆகிய உபய ராசிகளில் நின்றால் முடக்குவாத நோய் கட்டாயம் ஏற்படும்.

சந்திரன், சுக்கிரன், புதன் மற்றும் சனி பலமிழந்த நிலையில் இணைவுப் பெறுவது, அசுப பரிவர்தனை பெறுவது, 6,8,12 வீடுகளோடு லக்னம் மற்றும் லக்னாதிபதி சம்மந்தப்படுவது.

எலும்பிற்குக் காரக கிரகமான சூரியன் சனியுடன் எந்தவிதத்தில் தொடர்பு கொண்டாலும் எலும்பு மற்றும் வாத நோய் ஏற்படுகிறது. மேலும் சூரியன் 6,8,12 வீடுகளுடன் தொடர்பு பெறும்போது ஜாதகருக்கு வாதநோய் ஏற்படுகிறது. சூரியன், சந்திரன் செவ்வாயுடன் சேர்க்கை பெற்று லக்னத்தில் நின்றாலும் வாதநோய் ஏற்படுகிறது.

பத்தாம்வீடு முதுகு மற்றும் கால் மூட்டுக்களை பற்றி கூறுவதால் பத்தாம் வீட்டில் சனி, செவ்வாய் இணைவு பெற்றாலும் பத்தாம் வீடு சனியின் வீடாகி அங்கு செவ்வாய், ராகு போன்ற கிரகங்கள் நின்றாலும் தீவிர மூட்டுவலி ஏற்படுகிறது.

வர்க சக்கரங்களில் நோயைக் குறிக்கும் சஸ்தாம்ஸத்தில் லக்னத்திற்க்கு 6-ல் சனி நிற்பது மற்றும் ஆட்சி மற்றும் உச்ச வீடுகளில் நிற்பது. 

ஆர்த்ரைடிஸ் எனும் முடக்குவாத நோய்க்கான கிரஹ சேர்க்கைகள்

1. சனி லக்னத்தில் நின்று செவ்வாய் 5,7,9 வீடுகளில் நிற்பது. 

2. சனியும் சந்திரனும் 12-ம் வீட்டில் நிற்பது.

3. சூரியன், சந்திரன் மற்றும் சனி லக்னத்தோடு தொடர்பு கொள்வது.

4. குரு லக்னத்தில் நின்று சனி மூலை ராசியான மிதுனத்தில் அல்லது 7-ம் வீட்டில் நிற்பது.

5. சனியும் சந்திரனும் 6 அல்லது 9-ம் வீட்டில் நிற்பது, சந்திரன் ஆறாம் வீட்டதிபதியாகி புதன் சனி சேர்க்கை பெறுவது.

6. சனியும் ராகுவும் 2 அல்லது 3-ம் வீட்டில் நிற்பது.

7. சூரியன் கடகத்தில் நின்று சனியுடன் எந்தவிதத்திலாவது தொடர்பு கொள்வது.

8. லக்னாதிபதி லக்னத்திலேயே நின்று சனி 6-ம் வீட்டில் நிற்பது.

9. சூரியனும் சுக்கிரனும் தசா புத்தி நாதர்களாக அமைவது.

10. சனியும் செவ்வாயும் 6 அல்லது 12 வீட்டில் நிற்பது.

11. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய எலும்போடு தொடர்புடைய கிரகங்கள் லக்னத்தில் நின்று சனியோடு தொடர்புகொள்ளும்போது வாத நோய் ஏற்படுகிறது.

ஆர்த்ரைடிஸுக்கு ஜோதிட ரீதியான பரிகாரங்கள்

1. சனீஸ்வர பகவானுக்கு உகந்த சனிக்கிழமை மற்றும் புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் எண்ணை (நல்லெண்ணெய்) தேய்த்துக் குளிப்பது. பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணை ஸ்நானம் செய்யலாம். இதில் நல்லெண்ணெய் சனியின் காரகம் பெற்று மூட்டுகளுக்கு உயவுப்பொருளாக பயன்படுவதால் மூட்டுத் தேய்மானத்தை குறைக்கிறது.

2. பன்னீரில் செய்த உணவு வகைகளில் கால்ஷியம், மெக்னீஷியம், ப்ளோரைட், பொட்டாஷியம் போன்ற தாத்துக்கள் நிறைந்து நிறைந்து இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகள் பலமாகவும் உதவுவதாக அறிவியல் செய்திகள் கூறுகின்றன. கால்ஷியம் எனும் சுண்ணாம்பு சத்தோடு மெக்னீஷியம், பொட்டாஷியம் ப்ளோரைட் போன்றவை சரி விகிதத்தில் இருந்தால்தான் உறுதியான எலும்புகள் அமையும் என்பது கூடுதல் தகவலாகும். பன்னீர் மற்றும் சீஸ் போன்ற பொருட்களுக்கு சனீஸ்வர பகவான் தான் முதன்மை காரக கிரகம் என்றாலும் அடிப்படையில் பாலில் இருந்து தயாரிப்பதால் சந்திரன் சேர்க்கையும் காரகமும் இருக்கத்தான் செய்கிறது. பன்னீரில் எலும்பு வளர்ச்சிக்கு உறுதுணை செய்யும் மெக்னீஷியம் நிறைந்திருக்கிறது. மெக்னீஷியத்தின் காரகர் சந்திரபகவான் என மருத்துவ ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. 

3. வாத, பித்த, கப தோஷங்களை சமன் செய்யும் திரிபலா சூரணம், யோகராஜ குக்குலு, வாத ராக்ஷஷ ரசம் போன்ற ஆயுர்வேத மருந்துகளைத் தகுந்த மருத்துவ ஆலோசனையுடன் எடுத்துக்கொள்வது.

4. மேலும் ஆயுர்வேத மருந்து மற்றும் சனியின் காரகம் பெற்ற ப்ரபஞ்சன விமர்த்தன தைலம், கொடன்சுகாதி தைலம், நாராயணாதி தைலம், கற்பூராதி தைலம், பிண்ட தைலம் போன்றவற்றை மிதமான சூட்டில் தேய்த்து விடுவதும் சிறந்த பலனளிக்கும்.

5. சனீஸ்வர பகவானுக்கு சனிக்கிழமைகளில் எள் விளக்கேற்றுவது, முதியவர் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி (செருப்பு, குடை கைத்தடி) செய்வது, திருநள்ளாறு, திருநாரையூர், குச்சனுர், சென்னை பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலுர் ஆகிய சனி ஸ்தலங்களுக்கு அவ்வப்போது சென்று வருவது.

6. சூரிய நமஸ்காரம் செய்வது மற்றும் ஆதித்திய ஹ்ருதயம் போன்ற ஸ்லோகம் சொல்வது மற்றும் கேட்பது எலும்புக்குக் காரகனாம் சூரியனுக்கு உகந்தது. சென்னையில் உள்ளவர்கள் வியாசர்பாடியில் உள்ள அருள்மிகு ரவிஸ்வரர் கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் சென்று தரிசித்து வருவது சிறந்த பலனளிக்கும்.

7. புதனுக்கு உகந்த புதன் கிழமைகளில் பெருமாள் கோயில் அல்லது நவக்கிரக புதன் சன்னதிகளில் நரம்பைப் பலப்படுத்தும்  புரதச் சத்து மிகுந்த பாசிப்பயறு சுண்டல் செய்து சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு விநியோகம் செய்துவிட்டு சாப்பிடுவது.

8. செவ்வாயின் காரகம் நிறைந்த பிஸியொதிரபி எனப்படும் உடற்பயிற்சியைச் செய்வது.

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

Mobile 9498098786

WhatsApp 9841595510
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com