தாமிரவருணி மகா புஷ்கரத்தில் நீராடுபவர்கள் கவனத்திற்கு!
தாமிரவருணி மஹா புஷ்கர விழா கடந்த வியாழனன்று தொடங்கி நடைபெற்று வருகின்றது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மஹா புஷ்கரம் இம்மாதம் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் படித்துறைக்கு வந்து புனித நீராடி வருகின்றனர்.
குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் புஷ்கரம் நடைபெறும். இந்தாண்டு விருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியாவதால் தாமிரவருணியில் புஷ்கரம் நடைபெறுகிறது.
புஷ்கரத்தில் நீராடுபவர்கள் முழுபயனைப்பெற இந்த வழிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.
• நீராடுபவர்கள் செருப்பு போட்டுக்கொண்டு புஷ்கரத்தில் நீராடக் கூடாது.
• நதிக்கரையில் உள்ள மண்ணை உடம்பில் பூசிக் கொள்வதோ, மண்ணை வீட்டிற்குக் கொண்டுசெல்வதோ கூடாது. நதியை மனதார வணங்கிவிட்டு பின் இறங்கி நீராட வேண்டும்.
• புனித குளத்தில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர்முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது நதியின் ஒட்டத்திற்கு எதிர்முகமாக நின்றே நீராட வேண்டும்.
• ஆண்கள் அரைஞான்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது.
• பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக்கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக்கூடாது. நதியில் ஷாம்பு பயன்படுத்தக்கூடாது.
• நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ்தல், சிறுநீர் கழிப்பதும் பாவச் செயலாகும். ஈரத்துணிகளை நதியினுள் பிழியக்கூடாது.
• நதியில் மூழ்கும் போது ஒவ்வொரு முறையும் ஹரி, ஹரி என்று சொல்ல வேண்டும்.
• சூரிய உதயத்திற்கு முன்பு அருணோதய காலத்தில் நீராடினால் மிக மிகப் புண்ணியம் கிடைக்கும். திருமணமாகாதவர்கள் அதிகாலை நீராடுவதே சிறந்ததாகும்.